2024 தேர்தலில் பாஜகவுக்கு கல்தா-வா..? இபிஎஸ்ஸின் திட்டம் இதுதானா..? செல்லூர் ராஜு சொன்ன சூசக தகவல்…!!

Author: Babu Lakshmanan
28 August 2023, 10:38 am
Quick Share

திமுகவுக்கு எப்பவுமே தானா சேர்ந்த கொள்கை கூட்டமாக இருக்க மாட்டார்கள் என்றும், காக்கா கூட்டம் தான் சேர்ப்பார்கள் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரை விமான நிலையம் அருகில் உள்ள வளையங்குளம் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசினார்.

இந்த மாநாட்டுக்கான ஏற்பாட்டை மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செய்திருந்த நிலையில், அதிமுக எழுச்சி மாநாடு மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு காரணமாக இருந்து, அதற்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, பீடா என தடபுடலாக விருந்தளித்து அவர்களுக்கு நன்றி கூறினார்.

முன்னதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- அதிமுக மாநாடு வெற்றி பெற முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிசாமி தான். மாநாட்டில் அப் டூ டேட் வரை கவனம் செலுத்தி பணிகளை எடப்பாடி கவனித்தார். எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரி அதிமுக மாநாடு நடைபெற்றது. வரலாற்றில் அதிமுகவை தவிர எவனும் இப்படி ஒரு மாநாட்டை நடத்தி இருக்க முடியாது.

புதுமையாக வேறு மாநாடு நடைபெற்றது. நவீனமாக மாநாடு நடைபெற்றது. கொளுத்தும் வெயிலில் எடப்பாடியார் பேச்சை கடும் வெயிலிலும் பார்த்து ரசித்தனர். படத்திற்கு புரோமேஷன் போல அதிமுக மாநாடுக்கு நாங்கள் புரோமோட் செய்தோம். 2014ல் கூட்டணி இல்லாமல் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. எடப்பாடியார் என்ன நினைக்கிறார் என எங்களுக்கே தெரியாது. படைத்த பிரம்மனுக்கும் எடப்பாடி மனதிற்குள் என்ன நினைக்கிறார் என தெரியாது.

அதிமுகவின் மாநாட்டால் திமுகவிற்கு அதிர்வேட்டு பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளார் எடப்பாடி. அதிமுக மாநாட்டை பார்த்து முதல்வர் நடுங்கி போய் கிடக்கிறார். அதிமுக மாநாட்டை கண்டு திமுக பயந்து டிசம்பரில் திமுக எழுச்சி மாநாடு நடத்த உள்ளனர். திமுகவுக்கு எப்பவுமே தானா சேர்ந்த கொள்கை கூட்டமாக இருக்கமாடார்கள். காக்கா கூட்டம் தான் சேர்ப்பார்கள். மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு எல்லாம் உணவுகளை வாரி வாரி வழங்கிய வள்ளல் பெருமான் தான் எடப்பாடி.

குறைசொல்லுபவன் எப்படி வேண்டுமானாலும் சொல்வான். எதை வேண்டுமானலும் சொல்லுவான். பத்து அண்டா உணவு வீணானதை பேசி திசைதிருப்புகிறார்கள். நாங்கள் வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவர்கள். காலை உணவு திட்டத்தில் உப்புமா கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். நாட்டை காப்பாற்றியதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் தனித்து நின்று தேர்தலில் நிற்கட்டும்.

பட்டம் என்ன பெரிய பட்டம். மக்கள் சேர்ந்து எடப்படியாருக்கு கொடுத்த பட்டம் போதும். பட்டம் கொடுத்த போது தான் தெரியும் என சொல்வது பற்றி கவலையில்லை. அதை போய் பெருசா எடுத்துக்கிட்டு இருக்கிங்க. அதிமுக மாநாடு மூலம் தான் வலுவாக மாறிட்டேன் என எடப்படியார் காண்பித்துவிட்டார், என பேசினார்.

Views: - 302

0

0