ஆன்லைன் ரம்மி விளையாடினால் 3 மாதம் சிறைதண்டனை.. ஒருவழியாக ஒப்புதல் கொடுத்த ஆளுநர்… அமலுக்கு வந்தது ஆன்லைன் சூதாட்ட தடை!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 4:22 pm
Online Rummy Governor - Updatenews360
Quick Share

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்தார். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்படு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பின்னர், மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த மசோதாவும் கிடப்பில் போடப்பட்டு வந்தது. அதேவேளையில், ஆன்லைன் ரம்மியால் அரங்கேறும் தற்கொலைகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதனால், ஆன்லைன் தடை மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே, அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்என் ரவி, ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தால், அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று கூறியிருந்தார். இந்த சூழலில், ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாட்டுக்கு எதிராகவும், ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க காலநிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், 2வது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை விளையாடினால் ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 311

0

0