ஆளுநர் ஆர்என் ரவி அமர்ந்த நாற்காலியை குப்பை வண்டியில் ஏற்றி சென்ற பேரூராட்சி ஊழியர்கள் : பரபரப்பு சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2023, 2:52 pm
RN RAvi - Updatenews360
Quick Share

தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. நீட் நுழைவுத்தேர்வு மசோதாவில் தொடங்கிய மோதல் தற்போது ஆன்லைன் சூதாட்ட மசோதாவரை நீடித்து வருகிறது.

இதற்கிடையே தமிழக ஆளுநர் அரசு நிகழ்வுகளில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர்கள் மட்டுமில்லாமல் அரசியல் கட்சிகளும் விமர்சித்து இருந்தன.

இதன் அடுத்த கட்டமாக தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட ஆளுநர், தமிழக அரசின் உரையில் உள்ள வார்த்தைகளை மாற்றி விட்டு தனது சொந்த கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இதற்கு ஆளுநர் முன்னிலையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஆளுநர் ரவி தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு தனது குடும்பத்தினரோடு சுற்றுலா சென்று வருகிறார்.

கடந்த வாரம் உதகையில் ஒரு வாரம் தங்கியிருந்த அவர், பல்வேறு கோயில்களிலும் வழிபாடுகளில் கலந்து கொண்டார். இந்தநிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தந்த தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது குடும்பத்தினர், கன்னியாகுமரி சன்செட் பாய்ண்டில் சூரிய அஸ்தமனத்தை காண திட்டமிட்டிருந்தனர்.

ஆளுநர் ரவி சூரியன் அஸ்தமாவதை அமர்ந்து பார்ப்பதற்காக நாற்காலிகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரியன் அஸ்தமிப்பதை ஆளுநர் ஆர்.என்.ரவியால் பார்க்க முடியவில்லை.

இதனால் அங்கிருந்து சிறிது நேரத்திலேயே ஆளுநர் புறப்பட்டு தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்றார். இந்தநிலையில் கன்னியாகுமரி சன்செட் பாய்ண்டில் ஆளுநர் மற்றும் அவரது குடும்பத்தினர் அமர்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்த நாற்காலிகளை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி பணியாளர்களால் குப்பை வண்டியில் ஏற்றப்பட்டு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 299

0

0