லக்கிம்பூர் வன்முறை சம்பவம் : ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல் விதிப்பு
Author: Babu Lakshmanan11 October 2021, 6:40 pm
உத்தரபிரதேசம் – லக்கிம்பூர் வன்முறையில் விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
லக்கிம்பூர் பகுதியில் அரசு விழாவில் பங்கேற்கச் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை, அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அப்போது ஆஷிஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, வெடித்த வன்முறையில், பத்திரிகையாளர் உட்பட மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன்மூலம், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்தது. இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே, விவசாயிகள் மீது காரை ஏற்றிய ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோரை கைது செய்யக்கோரியும், ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையும், மத்திய அமைச்சருமான அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது. அதேவேளையில், மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான வழக்கின் விசாரணைக்காக ஆஷிஷ் மிஸ்ராவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். மேலும், உடல்நிலை சரியில்லாததால்தான் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை என்றும், விரைவில் அவர் ஆஜராவார் என்று அவரது தந்தை அஜய் மிஸ்ரா கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, 2வது சம்மனும் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த 9ம் தேதி ஆஷிஷ் மிஸ்ரா போலீசில் ஆஜரானார். அன்று இரவே நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் இன்று மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது, விசாரணை நடத்துவதற்காக அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, காவல்துறையின் கோரிக்கையை ஏற்று ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
0
0