ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் தலைமை செயலகமாக மாற்றப்படுகிறதா..? அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

Author: Babu Lakshmanan
24 August 2023, 12:28 pm
Quick Share

கோமாளித்தனமாக ஆட்சி நடத்தி விட்டு இப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிமுகவை விமர்சனம் செய்தார்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 8.72 கோடி மதிப்புடைய நவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ எந்திரம் மற்றும் ரூபாய் 3.94 கோடி மதிப்பிலான குடல், இரைப்பை உள்நோக்கி கருவி என மொத்தம் ரூபாய் 12.66 கோடி மதிப்புள்ள நவீன உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொண்டு வந்தார்.

தொடர்ந்து அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :-
தமிழ்நாட்டு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை பல்வேறு உயர் சிகிச்சை உபகரணங்கள் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் தொடர்ச்சியாக பொருத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அல்ட்ரா ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே உள்ளிட்டவை உள்ளது. அடுத்த கட்டமாக 8.72 கோடி மதிப்புடைய நவீன 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ எந்திரம் பயன்பாட்டுக்கு தமிழ்நாட்டில் முதல் முறையாக வந்துள்ளது தனியார் மருத்துவமனையில் கூட இல்லை. பயோ மெட்ரிக் சிஸ்டம் என்ற புதிய சிஸ்டம் உள்ளது. ஆட்டோ பைலட் வசதி உள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க முன்பு ஒரு பணியாளர் உடன் இருந்து உதவ வேண்டும். இந்த இயந்திரம் மூலம் கண்ட்ரோல் ரூம் மூலம் எப்படி வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

தினம்தோறும் இந்த மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட புற நோயாளிகள், 100க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் பயன் அடைந்து உள்ளனர். 65 நாட்களில் 117 அறுவை சிகிச்சைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் தொடங்கும் பணி நடந்து வருகிறது. அரியலூர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைகளிலும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் கொண்டு வரப்பட உள்ளது.

ஜூன் 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையின் இன்னும் இரண்டு அறுவை சிகிச்சை அரங்கு பயன்பாட்டுக்கு வருகிறது. உலக அளவில் உள்ள நான்கு வகையான எண்டாஸ்கொப் கருவி இந்த மருத்துவமனையில் உள்ளது. இந்திய அளவில் எந்த மாநில அரசிலும் இல்லாத எந்த தனியார் மருத்துவமனையிலும் இல்லாத double ballon endoscopy கருவி இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பெருகுடல் மட்டுமின்றி சிறு குடல் ஆய்வும் செய்ய முடியும்.

ஏற்கனவே 29 அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள், டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியும் பயன்பாட்டில் உள்ளது. 20 ஆயிரம் புற நோயாளிகள் பயன் பெற்று உள்ளனர். 625 உள் நோயாளிகள் பயன் அடைந்து உள்ளனர். 22,549 இரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.176 endoscopy செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாறுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனை என்ற பெயரளவில் மட்டும் இருந்ததை இந்த ஆட்சியில் தான் பல சிறப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டது. இருதய அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவை அதிகம் செய்யப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பை விட ஒரு நாளுக்கு 2000 த்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். ஓமந்தாரார் மருத்துவமனை ஒரு காலத்திலும் தலைமை செயலகமாக மாறாது. எடப்பாடி பழனிச்சாமியிடம் தைரியமாக சொல்லலாம்.

டெங்கு பாதிப்போ, உயிரிழப்போ தமிழகத்தை பொறுத்தவரை இல்லை. இருப்பினும் மருந்து அடிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர். இந்த வளாகத்தில் உள்ள முதியோர் நல மருத்துவமனை திறந்து வைக்க மத்திய அரசிடம் பேசி வருகிறோம். விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாஸ்டர் செக் அப் இன்னும் 15 நாட்களில் தொடங்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் மற்றும் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு காரணம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மருத்துவக் கல்லூரியில் போதிய குடிநீர் வசதி சுத்தமாக இல்லை. விளைநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளது. இதுதான் மருத்துவக் கல்லூரியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தாமதம். நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் ஆயிரம் அடி தோண்டினாலும் நிலத்தடி நீர் வராத இடத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை தேர்வு செய்துள்ளனர்.

நாகப்பட்டினத்தில் விலை நிலத்தில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. தற்போது மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ள இடத்திற்கு அருகாமையில் நாகப்பட்டினம் அதிமுக செயளாலர் அவருடைய பெரிய அளவிலான விவசாய நிலம் உள்ளது. அவரின் நிலத்தின் மதிப்பை உயர்த்துவதற்காக, அருகாமையில் மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

ஒரு நாளுக்கு ஒன்றை லட்சம் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக அருகாமையில் இரண்டு கிணறுகள் ஏற்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. விளை நிலத்தில் மருத்துவக் கல்லூரி கட்டிவிட்டு, முறையான மண் பரிசோதனையும் குடிநீர் பரிசோதனையும் செய்யாமல் மருத்துவக் கல்லூரியில் கட்டியுள்ளனர். விளைநிலத்தில் மருத்துவக் கல்லூரியை கட்டிவிட்டு சீக்கிரம் திறக்க முடியவில்லை என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இது ஒரு கேலி கூத்தானது.

அதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி கட்டி திறந்து விடப்பட்டுள்ளது. மருத்துவமனை திறக்க வேண்டும் என்றால் காவிரியில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தூரத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும். பொதுப்பணித்துறை முறையாக மண் பரிசோதனை செய்யவில்லை. கூடுதலாக 9 கோடி ரூபாய் செலவு செய்து காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வர பணிகள் நடைபெற்று வருகிறது. கோமாளித்தனமாக ஆட்சி நடத்தி விட்டு இப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள், என்று அதிமுகவை விமர்சனம் செய்தார்.

Views: - 265

1

0