அனிதா மாதிரிதான் அந்த சிறுமியும் : இது ஸ்டாலின் கண்ணுக்கு உறுத்தவில்லையா? கொதிக்கும ஷ்யாம் கிருஷ்ணசாமி!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2023, 9:34 am
Shyam - Updatenews360
Quick Share

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சின்னராஜா குப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி விஷ்ணு பிரியா(16). கூலித் தொழிலாளியான இவரது தந்தை மது போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தாயிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

தந்தையின் போதை அடாவடியால் சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். முதலில் சிறுமி விஷ்ணுபிரியா தந்தையை திருத்திவிடலாம் என்ற நம்பிக்கையுடன், இனிமே குடிக்க வேண்டாம் என்று தந்தையிடம் பல முறை கெஞ்சிக் கேட்டிருக்கிறார்.

ஆனால், குழந்தையின் கண்ணீருக்குக் கூட மனம் கரையாத அளவுக்கு போதை அவரை அடிமையாக வைத்திருந்தது.

தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பார்த்துவந்த சிறுமி விஷ்ணுபிரியா, இறுதியில் வேறு வழி இல்லாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், சிறுமி தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை. என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்தவும். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ அப்போதுதான் என் ஆத்மா சாந்தியடையும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊரெல்லாம் சாராய கடையையும், பார்களையும் திரந்துவைத்து அவள் அப்பாவை மதுவிற்கு அடிமையாக்காமல் இருந்திருந்தால் டாக்டராக கூட ஆகியிருப்பாள் என ஷியாம் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனிதா வயதுடைய மாணவி தான் விஷ்ணுபிரியாவும்… ஊரெல்லாம் சாராய கடையையும், பார்களையும் திறந்துவைத்து அவள் அப்பாவை மதுவிற்கு அடிமையாக்காமல் இருந்திருந்தால் டாக்டராக கூட ஆகியிருப்பாள். ஸ்டாலினுக்கு உறுத்தவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 379

1

0