ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர்… வெளிநாடு செல்ல இருந்த கனவு பறிபோனது… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு
Author: Babu Lakshmanan3 ஆகஸ்ட் 2022, 2:23 மணி
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டின் மூலம் பணத்தை சம்பாதித்து விடலாம் என்ற விளம்பரமும், ஆசையையும், அடுத்தடுத்து மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் இதுவரைக்கும் 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும், காவலர் உள்ளிட்டவர்களும் இந்த ஆன்லைன் ரம்மிக்கு பலியாகி வருவது தமிழகத்தில் வேதனையளிக்கும் விதமாக உள்ளது.
இதனிடையே, மனித உயிர்கொல்லியான ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், இதற்காக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டதாரி இளைஞர் சுரேஷ் என்பவர் சுரேஷ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் ரூ.5 லட்சம் பணம் இழந்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வெளிநாடு செல்ல வைத்திருந்த பணத்தை ரம்மியில் இழந்ததுடன், நண்பர்களிடம் கடன் பெற்று, அதனையும் ரம்மியில் தொலைத்ததாக தெரிய வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் சுரேஷ் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 28ம் தேதி தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த பிரபு என்பவர், ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்த விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நடந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில், மேலும் ஒரு இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இதனிடையே, இன்னும் உயிர்கள் பறிபோவதற்கு முன்பாக, ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0