அத்திப்பட்டி போல சென்னையில் காணாமல் போன ‘பரங்கிமலை’ கிராமம்… பத்திரப்பதிவுத்துறையின் மாபெரும் மோசடி… பகிரங்கக் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
22 November 2023, 4:16 pm
Quick Share

சென்னை : சென்னை பரங்கிமலை கிராமத்தில் எந்த நிலம் யார் பெயரில் பட்டா இருக்கிறது என்ற விவரங்களை வருவாய்த்துறை இணையதளத்தில் இருந்து அகற்றியது ஏன்? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

அறப்போர் இயக்கம் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது :- சென்னை பரங்கிமலை கிராமமே சிட்டிசன் படம் அத்திப்பட்டி போல இணையதளத்தில் பட்டா விவரங்கள் இல்லாமல் காணாமல் அடிக்க செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம், பரங்கிமலை பகுதியில் உள்ள நிறைய அரசு நிலங்களை அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் நில மாபியா சேர்ந்து ஆட்டையை போட்டு உள்ளார்கள். இது குறித்த விரிவான புகார் அறப்போர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் கொடுத்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் லஞ்ச ஒழிப்பு துறைக்கு நேர் எதிரே உள்ள எஸ்பிஐ நிலமே அரசு நிலம் தான். இதற்கு மாதம் 5 லட்சம் ரூபாய் SBI நிலஅபகரிப்பு செய்துள்ளவர்களுக்கு வாடகை கொடுத்து வருகிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரங்கிமலை கிராமத்தில் அரசு நிலங்கள் தனியாரால் சூறையாடப்பட்டது எப்படி ? என்பது குறித்து அறப்போர் இயக்க நிர்வாகி ஜெயராம் வெங்கடேசன் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியாவில் கூறியிருப்பதாவது ;- தமிழ்நாட்டில் அத்திப்பட்டி கிராமம் மேப்பை விட்டே காணாமல் போனதாக சிட்டிசன் படத்தில் பார்த்திருப்பீர்கள்.. அதே மாதிரி சென்னையில் ஒரு அத்திப்பட்டி இருக்கிறது. சென்னையின் அத்திப்பட்டி பரங்கிமலை கிராமத்தை காணவில்லை.

தமிழக வருவாய் துறையினர், பரங்கி மலை கிராமத்தில் உள்ள நிலங்கள் சர்வே நம்பர் படி யார் பெயரில் பட்டா உள்ளது என்கிற முழுமையாக தகவலை இணையதளத்தில் இருந்தே தூக்கிவிட்டனர். நீங்கள் வருவாய் துறையின் இணையதளத்தில் அனைத்து கிராமங்களின் பட்டாவையும் இணையதளத்தில் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் பரங்கிமலை கிராமத்தை மட்டும் பார்க்க முடியாது. ஏன் பரங்கிமலையை அத்திப்பட்டியை மாற்றினார்கள் என்றால், இங்கு நிறைய அரசு நிலங்கள் உள்ளன. சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டீஸ் அரசு 50 வருடம், 100 வருடம் லீஸ் கொடுத்த நிறைய இடங்கள் எல்லாம் இதில் இருக்கிறது. இந்த இடங்கள் எல்லாம் அரசாங்கத்திற்கு வர வேண்டிய நிலங்கள் ஆகும்.

அந்த நிலங்களை எல்லாம் ஆட்டையை போடுவதற்காக, ஏற்கனவே நிறைய பேர் ஆட்டையை போட்டுவிட்டார்கள். இது வெளியில் தெரியக்கூடாது. எது எதெல்லாம் அரசாங்க நிலம் என்பது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வருவாய்துறை மக்களிடம் இருந்து முழுமையாக மறைத்துள்ளது. அதற்காக சென்னை பரங்கிமலை கிராமத்தில் எந்த நிலம் யார் பெயரில் பட்டா இருக்கிறது என்ற விவரங்களை வருவாய்த்துறை இணையதளத்தில் இருந்து அகற்றி உள்ளது. பரங்கிமலை கிராமத்தில் பிரிட்டீஸ் அரசு லீசுக்கு கொடுத்த பல இடங்கள் மீண்டும் அரசுக்கு வந்து சேரவில்லை.

அந்த அரசு நிலங்களின் சர்வே நம்பர்களை குறிப்பிட்டு இதை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என 2015ம் ஆண்டு ஆலந்தூர் தாசில்தார் பத்திரப்பதிவு துறைக்கு கடிதம் எழுதினார். ஆனால் அதன் பின்னரும் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன. ஆனால் உத்தரவிற்கு பின்னர் இந்த பதிவுகளை செய்த சப் ரிஜிஸ்தாரர் உமா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Views: - 258

0

0