பிரதமர் மோடி இன்று திருச்சி பயணம்…. ரெங்கநாதர் ஆலயத்தை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு – 3,700 போலீசார் கண்காணிப்பு
Author: Babu Lakshmanan20 January 2024, 8:39 am
திருச்சி ; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி செல்கிறார்.
முன்னதாக நேற்று மாலை சென்னை வந்த பிரதமர் மோடி தேசிய அளவிலான கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்தார். இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.45 மணியளவில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு செல்கிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார் சன்னிதி மற்றும் பெருமாளை தரிசனம் செய்கிறார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்பு வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து தமிழறிஞர்களால் கம்பராயணம் பாட பிரதமர் அவை கேட்க உள்ளார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்று அடைகிறார். மதியம் 2.05 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். ஜன.21 காலை, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.
காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் 10.25 முதல் 11மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். 11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
0
0