புதுச்சேரியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் அடக்கம் ; கண்ணீர் விட்டு கதறி அழுது வழி அனுப்பிய குடும்பத்தினர்..!!

Author: Babu Lakshmanan
7 March 2024, 1:16 pm
Quick Share

புதுச்சேரியில் பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென மாயமானார். இது குறித்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அவரது பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சாக்கு முட்டையில் கைகள் கட்டப்பட்ட நிலையில், சிறுமி 5ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தி நேற்று 6-ம் தேதி சிறுமியின் உடலை உறவினிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, ஆர்த்தியின் வீடான சோலை நகரில் பொதுமக்களில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சமூக ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் திரண்டு சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

மேலும் சிறுமியின் கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக தண்டிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வந்தது. இந்த நிலையில், சிறுமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. சோலை நகர் வீட்டில் இருந்து சிறுமியின் உடலுக்கு சடங்குகள் செய்து முடிக்கப்பட்டு இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினர் திரளாக கலந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுது சிறுமியை வழி அனுப்பி வைத்தனர். முத்தியால்பேட்டை சோலை நகர் வழியாக வைத்தி குப்பம் பாப்பம்மாள் கோவில் இடுகாட்டை அடைந்த சிறுமிக்கு முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு பணத்தை போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி மாநில சமூக ஆர்வலர்கள் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும், போதை நடமாட்டத்தை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.

இந்த இறுதி ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் வழி நெடுக குவிக்கப்பட்டு இருந்தனர். சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியதை பார்ப்பவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டபடியே இருந்தனர்.

Views: - 599

0

0