‘என்னடா, இது ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை’… ராமநாதபுரத்துக்கு படையெடுக்கும் பன்னீர்செல்வங்கள் ; ஒரே பெயரில் 5 பேர் போட்டி…!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 4:18 pm
Quick Share

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் என்று பெயரில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மதுரை மேளக்கிழார் பட்டி பகுதியைச் சேர்ந்த ஒச்சா தேவர் என்பவரது மகன் பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக மூன்று ஓபிஎஸ் என்று சொல்லக்கூடிய ஓ பன்னீர்செல்வம் என்ற பெயருடைய சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அதில் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒய்யாரம் என்பவரின் மகன் பன்னீர்செல்வம், மதுரை வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் என்பவரின் மகன் பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் என்பவரது மகன் பன்னீர்செல்வம் என இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தனர்.

மேலும் நேற்று மனு தாக்கல் செய்த மேல்பட்டி ஒச்சா தேவர் மகன் பன்னீர்செல்வம் இன்றும் வருகை தந்திருந்த நிலையில், ‘ப்ளீஸ் என்னை வீடியோ எடுக்காதீங்க, ‘வீட்டுல நிறைய பிரச்சனை ஆயிடுச்சு’ என, செய்தியாளர்களை கெஞ்ச. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களிடம், திருதிருவென விழித்தவாறே பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார்.

ஓபிஎஸ்-க்கு போட்டியாக மேலும் 4 ஓபிஎஸ்க்கள் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதால், வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படும் என்பதல் எந்த சந்தேகமும் இல்லை. ஓபிஎஸ் சுயேட்சையாக போட்டியிடுவதால், பிரதான அரசியல் கட்சிகளின் சின்னத்திற்கு பிறகும், இறுதியாக பெயர் அடிப்படையில் ஓபிஎஸ்களின் சின்னம் அடுத்தடுத்து வரும். இதனால், எது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சின்னம் என்பதில் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படும்.

இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்தும் சூழ்ச்சியாக, அவருடைய பெயரில் உள்ளவர்களை சில கட்சிகள் திட்டமிட்டு களமிறக்குவதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இதுஒருபுறம் இருக்க, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வங்கள் வந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 190

0

0