‘அமைச்சர் உதயநிதியை ஏன் சும்மா விட்டீங்க’… சனாதன விவகாரம் ; காவல்துறை மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி..!

Author: Babu Lakshmanan
6 November 2023, 11:44 am
udhayanidhi-stalin-updatenews360
Quick Share

சனாதன விவகாரம் தொடர்பாக சர்ச்சை பேச்சு பேசிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சனாதன மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்து அறசிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு, சனாதன ஒழிப்பு மாநாட்டில் சேகர் பாபு கலந்து கொள்ளலாமா..? என்றும், சனாதனத்தை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது, இந்து மதத்தை ஒழிப்பேன் என்று கூறுவதற்கு சமம் என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியதாவது :- சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பேசியதன் விளைவாகத்தான் தற்போது திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு வழக்கு தொடரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறை தங்களுடைய கடமையை புறக்கணித்தது போன்றது ; எந்த மதத்திற்கும் எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது, எனக் கருத்து தெரிவித்தார்.

Views: - 319

0

0