பயங்கரவாத அமைப்புடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு தொடர்பு…? சிவகங்கையில் வீடு புகுந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரெய்டு..!
Author: Babu Lakshmanan7 அக்டோபர் 2022, 1:44 மணி
விருதுநகர் : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் திட்டியதாகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்சேர்த்தல், நிதியுதவி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது வைக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்தியா முழுவதும் 23 மாநிலங்களில் பிஎஃப்ஐக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, பிஎஃப்ஐ அமைப்பிற்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இதற்க்கு விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி சாலையில் வசித்து வரும் ஓட்டுநரான நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி விக்னேஸ்வரன் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி நிர்வாகியான விக்னேஷ்வரனுக்கு தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
விக்னேஸ்வரனிடம் இருந்து விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புத்தகங்கள் கையேடுகளை கைப்பற்றினர். சோதனையில் சில முக்கிய ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பிஎப்ஐ அமைப்பினர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய பரபரப்பு அடங்குவதற்குள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி வீட்டில் தேசிய புலானய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2
0