நடிகர் தாமு பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழுத பெண் காவலர்… நிசப்தமான அரங்கம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2023, 11:44 am
Dhamu - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக, நகைச்சுவை பங்களிப்பை தந்து வருபவர் நடிகர் தாமு.. டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்றுதான் இவரை சொல்ல வேண்டும். டைரக்டர் பாலசந்தரின் சீடர் என்பது உட்பட சினிமாவில் இவருக்கான அங்கீகாரம் நிறைய உண்டு என்றாலும், யாரும் அறிந்திராத பல முகங்கள் தாமுவுக்கு உண்டு.

இவர் ஒரு கல்வி சேவையாளர்… 10 வருடத்துக்கு மேல் இந்த சேவையை செய்து வருகிறார்… சேவைசெம்மல், மாணவர் தளபதி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்விருது, சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம்-(அமெரிக்கா) டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ், “ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021” என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது உட்பட நூற்றுக்கும் அதிகமான விருதை பெற்றவர்.

தமிழகம் உட்பட, நாட்டின் ஒரு லட்சம் பேராசிரியர்கள், 30 லட்சம் பெற்றோர்களை கொண்ட தன்னுடைய அமைப்பின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஊக்கமும் பயிற்சியும் அளித்து வரும் சேவை அளப்பரியது.

சென்னையில் இன்று நடந்த சம்பவம் ஒன்று, அனைவரது கவனத்தையும் திருப்பி வருகிறது. அரியலூர் மாவட்டம், கொளத்தூர் மாவட்டத்தில் “போதை ஒழியட்டும், பாதை ஒளிரட்டும்” என்ற தலைப்பில் ஐசிஎப் அம்பேத்கர் மன்றத்தில் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 6 அரசு பள்ளிகளை சேர்ந்த 1200 மாணவர்களுடன் ஆசிரியர்களும் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக தாமு கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் “மிமிக்ரி” மூலமாகவே சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “செல்போன் போன்ற பல வகைகளில் அடிமையாகின்றனர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு என்ற பெயரில் வாரத்தில் மூன்று நாட்கள் பள்ளிகளில் நடத்த வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.. அப்பா, அம்மாதான் ஹீரோ.. எங்களை போன்ற நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கெல்லாம் பால் ஊத்தாதீங்க.. உங்க வாழ்வு சிறக்க வழி ஏற்படுத்தி கொடுத்தது பெற்றோர்களும், பேராசிரியர்களும் மட்டும்தான்.. நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடாமல் பேராசிரியர்களை கொண்டாடுங்கள்.

பிறப்பு முதல் கல்லூரி பருவம் வரை பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோர்களே.. அவர்களின் அன்பு அளவிடமுடியாதது” என்று உருக்கமாக பேசினார். தாமு பேசப்பேச, அங்கிருந்த ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் கண் கலங்கினர்… அப்போது, அங்கு பாதுகாப்பில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர், தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்..

வழக்கமாக தாமு யதார்த்த வாழ்வியலை உருக்கமாக பேசுபவர்.. அவர் எந்த அரங்கில் பேசினாலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கண்கலங்கி போவார்கள்.. ஆனால் இப்போது, ஒரு பெண் காவலரே விக்கி விக்கி அழுவதை பார்த்து, தாமுவே அதிர்ச்சியடைந்துவிட்டார்.. அங்கிருந்த பார்வையாளர்களும் அந்த பெண் காவலரை கண்டு ஆச்சரியப்பட்டு போனார்கள். இந்த சம்பவத்தினால் அரங்கமே சிறிது நேரம் நிசப்தமாகிவிட்டது.. உண்மைதான்.. காக்கி சட்டையையும்கூட, கண்ணீரால் நனைத்து விடும் வல்லமை பெற்றதுதானே இந்த “அன்பு”..!

Views: - 311

0

0