ஆளுநர் தமிழிசையை ஒருமையில் பேசிய அண்ணா விருது பெற்றவர் இவர்தானா?

Author: Rajesh
31 மார்ச் 2022, 12:08 மணி
Quick Share

தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலையில் நேற்று பாரதியார் நினைவு நுாற்றாண்டு விழா பன்னாட்டு ஆய்வரங்கம் நடைபெற்றது. ஆய்வரங்கை துவக்கி வைத்து புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், பெண்கள் உயர்வுக்காக பாடுபட்ட பாரதியாருக்கு, பெண்கள் அனைவரும் நன்றிக் கடன் செலுத்த கடமைப்பட்டுஉள்ளோம். சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது.

இணைய வழியில் தமிழை உலகம் முழுதும் எடுத்துச் செல்கிறோம். எனவே, இணையதளத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்த வேண்டும். அழகிய தமிழ் அண்ணா விருது பெற்ற ஒருவர், ‘இரு மாநிலங்களுக்கு அவள் கவர்னராக உள்ளாள்’ என என்னை ஒருமையில் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார். ‘இரு மாநிலங்களுக்கு இவள் ஆளுநரா?’ என ஒருமையில் விமர்சனம் செய்து திட்டியிருந்தார்.

இரண்டு மாநிலத்தில், ஒரு பெண் கவர்னராக இருப்பது எவ்வளவு சிரமம் ஒரு தமிழச்சி, இரண்டு மாநிலங்களையும் நிர்வாகம் செய்வதை எண்ணி, ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்! எதிர் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றால் கூட, தமிழ் மொழியின் இனிமையும், தொன்மையும் கெடாத வகையில் அழகிய தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.

திட்டுவதை கூட, அழகு தமிழில் திட்டுங்கள். மரியாதை தெரியாவிட்டால், நீங்கள் தமிழர்களே இல்லை என தமிழிசை சவுந்தர்ராஜன் ஆதங்கம் பொங்க கண்கலங்க வேதனையுடன் தெரிவித்தார்.

தி.மு.க.,வைச் சேர்ந்த மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், கவர்னர் தமிழிசையை பற்றி நாகரிகமற்ற முறையில் ஒருமையில் பேசியுள்ளார். அதற்கு வேதனை தெரிவிக்கும் விதமாக இவ்விழாவில் தமிழிசை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தமிழிசையின் இந்த பதிவுக்கு பிறகு நாஞ்சில் சம்பத், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், அண்ணா விருது பெற்ற நான் அதற்கு தகுதியுள்ளவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் என்னை போல் தமிழை சரியாக அழகாக பேசுபவர் எவரும் இல்லை. அப்படி இருந்தால் என்னுடன் போட்டிக்கு வர சொல்லுங்கள் போட்டியில் அவர் ஜெயித்து விட்டால் அந்த இடத்திலேயே செத்து விடுகிறேன் என பேசியுள்ளார்.

மேலும், அநாகரீகமாக தமிழில் பேசியதாக தமிழிசை வேதனை தெரிவித்துள்ளதற்கு, உங்களிடம் அதற்கான பதில் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, சித்ரவதை செய்து கொன்றாலும் நான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கண்டனங்களை பெற்று வருகிறது.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 1340

    0

    0