தமிழ்நாட்டை சிதைக்க முயற்சி… ஆளுநருக்கு எதிராக சீறிய காங்கிரஸ் எம்எல்ஏ!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2023, 10:50 am
RN RAvi - Udpatenews360
Quick Share

சென்னை, மயிலாப்பூரில் நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புரட்சியாளர் காரல் மார்க்ஸ் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அதில், கார்ல் மார்க்ஸ் தனித்து வாழ்வதையே பெரிதும் விரும்பினார். அவரது வளர்ச்சியையும், சமூகப் பணிகளையும் தனது குடும்பம தடுக்கும் என நம்பி இருக்கிறார்.

இதை நினைக்கும் போது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது என ஆளுநர் ரவி தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் ஆளுநர் ரவியின் கருத்திற்கு காங்கிரஸ் சட்டபமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாமேதை காரல் மார்க்ஸ் அவர் தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதரிகளான சோபியா மற்றும் எமிலி இவர்களுடன் தான் வாழ்ந்து வந்துள்ளார். காரல் மார்க்ஸ் பெரிய சித்தாந்தவாதியாகவும், தத்துவ வாதியாகவும் பின்னாளில் அறியப்பட்டாலும், முதலில் கவிஞராகத்தான் தன் வாழ்க்கையை தொடங்கியவர்.

ஜென்னி என்ற பெண்ணை காதலித்து மணந்தவர். 38 ஆண்டுகள் மிகச்சிறந்த முறையில், மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். பொருளாதார ரீதியில் துயருற்ற போதும், அவரது குடும்பத்தினர் மீது அன்பு கொண்டு கடைசிவரை அவர்களை விட்டு பிரியாமல் இருந்தவர். பிரதமர் மோடி போன்று அவர் குடும்பதை விட்டு பிரிந்து விடவில்லை. புரட்சியாளர் காரல் மார்க்ஸுக்கு இடது கை அவருடைய மனைவி ஜென்னியாக இருந்தால்,

அவருடைய வலது கையாக அவருடைய ஆருயிர் நண்பர் ஏங்கல்சும் இருந்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்துதான் அவரை இயக்கினார்கள். 1881ம் ஆண்டு, டிசம்பர் மாதம் அவர் மனைவி ஜென்னி உயிர் பிரிந்த பின், அவரின் ஆவி பிரிந்து விட்டது என்றும், ஒரு நடைப்பிணம் போல்தான் அவர் வாழ்ந்தார் என்றும் அவருடைய நண்பர் ஏங்கல்சு கூறுயள்ளார். அதற்குபின், 1883ம் ஆண்டு மார்ச் 14ம் அன்று மக்கள் நலன் குறித்தே தன் வாழ்நாளையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்த அந்த சிந்தனைச் சிற்பி தன்னுயிரை துறந்தார்.

இந்திய அரசியல் அமைப்பை பற்றித்தான் ஆளுநருக்கு தெரியாது என்றால் மேற்கத்திய அறிஞர்களின் வாழ்க்கை வரலாறும் ஆளுநருக்கு தெரியாது போலும்.மதம் மனிதனுக்கு அபின் என்று கூறினார் மாமேதை காரல் மார்க்ஸ். தத்துவஞானி ஹெகலுடன் முரண்பட்டதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் காரல் மார்க்ஸ் மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கின்றாரா?.

ஹிட்லரின் பாசிச சிந்தாந்தங்கள் மீது நம்பிக்கையுள்ளவர்கள் இயல்பாகவே யூதர்களை வெறுப்பார்கள். காரல் மார்க்ஸ் ஒரு யூதராகப் பிறந்தவர் என்ற காரணத்தினால் அவர் மீது விமர்சனம் வைக்கின்றாரா? மாமேதை காரல் மார்க்ஸ் அவர்கள், ஜாதியையும் தீண்டாமையையும் நிலப்பிரபுத்துவ-வர்ணாசிரமக் கோட்பாடுகளையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர்.

அதனால்தான், பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போல காரல் மார்க்ஸும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்துக்குக் கசப்பாக இருக்கிறது போலும்.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்து, தமிழ்நாட்டின் அரசியல் மாண்புகளைச் சிதைத்துக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதுதான் உண்மை.

இவரது சிந்தனை தமிழ்நாட்டைச் சிதைக்க முயற்சி செய்கிறது. இதனை தமிழ்நாட்டு மக்கள் பொருட்படுத்தப் போவதில்லை என்பதுதான் பேருண்மை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Views: - 236

0

0