பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை : தமிழக அரசு உத்தரவு
13 August 2020, 12:43 pmசென்னை : கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது ;- தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 22ம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ, தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ, சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்போது, அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.