தீராத சோகம்… சாத்தூரில் தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து.. வாலிபர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
4 May 2022, 9:58 am
Quick Share

விருதுநகர் : சாத்தூர் அருகே தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் சிவகாசி சிவகாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் (57) என்பவருக்கு சொந்தமான எஸ். பி.டி. பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த பட்டாசு தொழிற்சாலை டிஆர்ஓ உரிமம் பெற்று 5 அறைகளில் 20 தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சங்கு சக்கரம் உள்ளிட்ட சிறியரக பட்டாசு வெடிகள் தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணி செய்ய வந்த பொழுது, குடும்பன் பட்டியைச் சேர்ந்த சோலை குருசாமி என்பவரது மகன் விக்னேஸ்வரன் (25) ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பில் மேற்கொள்ளும் போது, உராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது இதில் அந்த அறை தரைமட்டமாகி. இடிபாடுகளில் சிக்கி சோலை விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு அலுவலர் கதிரேசன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தில் உயிரிழந்த சோலை விக்னேஸ்வரனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், வேறு யாரேனும் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா..? என்று தேடிவருகின்றனர். வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 794

0

0