யாருடைய அட்வைஸும் தேவையில்லை… காசாவுக்கு செக் வைத்த இஸ்ரேல்… ஹமாஸ் அமைப்புக்கு போட்ட நிபந்தனை!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 7:00 pm
Quick Share

யாருடைய அட்வைஸும் தேவையில்லை… காசாவுக்கு செக் வைத்த இஸ்ரேல்… ஹமாஸ் அமைப்புக்கு போட்ட நிபந்தனை!!

காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள தங்களின் நாட்டு மக்களை விடுவிக்குமாறு ஹமாஸ் அமைப்புக்கு நிபந்தனை போட்டுள்ளது.

கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, இஸ்ரேலிய மக்களை வீடு வீடாக புகுந்து கொலை செய்வது போன்ற வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களை கொன்று குவித்து வருகிறது. குறிப்பாக, காசாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்துவதால், அண்டை நாடுகளுக்கு மக்கள் அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர்.

மேலும், காசாவில் வீடு, மின்சாரம், எரிபொருள், குடிநீர், மருந்து பொருட்கள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் இஸ்ரேல் தடை செய்து விட்டது. இதனால், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு தடை விதிக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் கோரிக்கை வைத்தன. ஆனால், இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.

அதேவேளையில், ஹமாஸ் அமைப்புக்கு ஒரு நிபந்தனையை இஸ்ரேல் விதித்துள்ளது. அதாவது, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை விடுவிக்காத வரையில் காசாவுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்பட மாட்டாது என்றும், எந்தவொரு எரிபொருள் வாகனமும் உள்ளே நுழைய முடியாது என்று கண்டிப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும், மனிதாபிமானமாக நடந்து கொள்பவர்களிடம் தான் மனிதாபிமானமாக நடந்து கொள்ள முடியும். தார்மீக கடமைகளை எங்களுக்கு யாரும் கற்று தர வேண்டாம் என்று இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஹமாஸ் அமைப்பால் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் 150 இஸ்ரேலியர்களின் கதி என்ன வென்று இதுவரை தெரியவில்லை.

Views: - 475

0

0