3 மணி நேரத்தில் 30 முறை நிலநடுக்கம்.. ஜப்பானில் சிக்கிய பிரபல நடிகர் போட்ட பரபரப்பு டுவிட்..!

Author: Vignesh
2 January 2024, 1:11 pm
japan earthquake
Quick Share

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஜப்பானின் மேற்கு பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷு அருகே சுமார் 15 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஜப்பானின் வட மத்திய பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 5.5 முதல் 7.4, 7.5 மற்றும் 7.6 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பயங்கர நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததால் ஜப்பான் மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பலாம் என மிக அதிக சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது ஜப்பான் வானிலை ஆய்வு மையம். மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, இஷிகாவா, நைகட்டா மற்றும் டொயாமா மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், இஷிகாவா, நைகட்டா, டொயாமா உள்ளிட்ட கடற்கரையோர நகர மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004ல் இந்தோனோஷியா அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவில் சுனாமி தாக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஜப்பானில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, ஜப்பான் நகருக்குள் கடல் நீர் உள்புகுந்துள்ளது.

இதனிடையே, நிலநடுக்கத்தால் வீடு ஒன்று அடியோடு இடிந்து விழுந்ததாகவும், அந்த இடிபாடுகளால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரோடு புதைந்ததாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.

முன்னதாக, மத்திய ஜப்பானில் 3 மணி நேரத்தில் சுமார் 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 30 முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5க்கும் மேல் பதிவானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ntr

இந்நிலையில், பிரபலங்கள் பலரும் நியூ இயர் ஐ கொண்டாட வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அப்படி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார். அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதனை உணர்ந்ததாக ஜூனியர் என்டிஆர் தனது டுவிட்டர் பதிவில் போட்டுள்ளார். அதில், அவர் ஜப்பானிலிருந்து இன்று வீடு திரும்பினேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். கடந்த வாரம் முழுவதுமே அங்கேதான் இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில், அதிலிருந்து மீண்டு குணமடைய வேண்டும் என நம்புகிறேன் ஜப்பான் என்று பதிவிட்டுள்ளார்.

Views: - 195

0

0