பாஜக பிரமுகர் வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கி காட்டி கொலை மிரட்டல்.. பெட்ரோல் குண்டு வீசுவதாக மிரட்டிய ரவுடிகளால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 January 2023, 5:52 pm
Threaten - Updatenews360
Quick Share

நள்ளிரவில் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்த ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் தனபாலன் புகாா் அளித்தார்.

திண்டுக்கல் மாநகராட்சியில் 34 கடைகளை ஏலம் விடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக மாமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவருான ஜி.தனபாலன் தொடா்ந்து குற்றம்சாட்டி வந்தாா்.

தனபாலன் பணம், கடை கேட்டு மிரட்டியதாக நாளிதழ் ஒன்றில் வந்த செய்தியுடன், அவரது புகைப்படத்தை இணைத்து திண்டுக்கல் 14-ஆவது வாா்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சுவரொட்டிகள் பொதுமக்கள் பெயரிலும், காங்கிரஸ் சாா்பிலும் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தனபாலின் வீட்டுக்குச் சென்ற 2 ரெளடிகள், துப்பாக்கி முனையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனபாலன் புகாா் அளித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: கடலூரில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை நள்ளிரவு வீடு திரும்பினேன். அப்போது, எனது பெயரைக் கூறி அழைத்த 2 ரெளடிகள், பாஜகவை வளா்த்து வரும் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்.

10 நிமிஷங்களில் ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விடுவேன் என்றும், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிடுவதாகவும் மிரட்டினா்.

இதுகுறித்து, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் உலகநாதனைத் தொடா்பு கொண்டு புகாா் அளித்தேன். உடனடியாக அவா் எனது வீட்டுக்கு வந்தாா். போலீஸ் வேன் வரும் சப்தம் கேட்டதால் 2 ரெளடிகளும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.

அந்த 2 ரெளடிகளையும் கைது செய்து, எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Views: - 291

0

0