நைல் கட்டர் கத்தியில் 30 முறை குத்தி இளைஞர் கொடூரக் கொலை ; மதுபோதையில் உளறிய நண்பர்கள்.. விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
31 December 2022, 8:48 am
Quick Share

செங்கல்பட்டு ; மது போதையில் நைல் கட்டரில் இருந்த கத்தியை பயன்படுத்தி நண்பனை கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட புலிப்பாக்கம், மேட்டு தெரு பகுதியை சேர்ந்தவர் அருண் (35). இவர் கிடைக்கும் சிறுசிறு வேலைகளை செய்து வந்துள்ளார். இவர் அடிக்கடி, மனைவியிடமும் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

குடிப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு மறுவாழ்வு மையத்திற்கு, அருண் சென்று வந்த பிறகும் தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகவே இருந்து வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதிலிருந்து அடிக்கடி ஊரில் இருக்கும் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுடன் சென்று நள்ளிரவு வரை குடித்துவிட்டு போதையில் இருப்பதே வழக்கமாக கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முதல் அருண் திடீரென மாயமாகியுள்ளார். அருண் போதையில் எங்காவது சென்று இருக்கலாம் என அவர்கள் உறவினர்களும் விட்டுவிட்டனர். இந்த நிலையில், புலிப்பாக்கம் மேட்டு தெரு பகுதியை சேர்ந்த பசுபதி மற்றும் தனசேகர் ஆகிய இருவரும் சந்தேகத்துக்கு இடமான வகையில் கூடுவாஞ்சேரி அருகே மது குடித்துவிட்டு , ஏதோ கொலை செய்து விட்டோம் என பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.

இது குறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில், புலிப்பாக்கம் ஹைவே டவுன் பகுதியில் அருண், பசுபதி மற்றும் தனசேகர் ஆகியோர் இணைந்து மது அருந்துள்ளனர்.

அப்பொழுது அருணுக்கும் மற்ற இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பசுபதி மற்றும் தனசேகர் ஆகியோர் இணைந்து அருணை, நைல் கட்டரில் இருக்கும் சிறிய கத்தியை பயன்படுத்தி கண், காது, முகம் உள்ளிட்ட பகுதிகளில் 30 லிருந்து 40 வரை முறை குத்தி உள்ளனர்.

இதனையடுத்து, அங்கு இருந்த கால்வாயில் அருணை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். சம்பவ இடத்திலேயே அருண் துடிதுடித்து உயிரிழந்துள்ளார் . மறுநாள் காலை அருண் உயிரிழந்திருக்கிறாரா, என்பது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த இருவரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

அருண் அந்த பகுதியிலே இறந்த கிடந்ததை பார்த்து பயத்தில் அங்கிருந்து சென்று கூடுவாஞ்சேரி பகுதியில் மது அருந்திய பொழுது உளறி மாட்டிக் கொண்டுள்ளனர். இருவரையும் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 360

0

0