எதுக்கெடுத்தாலும் கருணாநிதியின் பெயர் தான்… தமிழ்நாட்டை கூட கலைஞர் நாடு என்று பெயர் மாற்றிடுவாங்க.. நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்..!!!

Author: Babu Lakshmanan
27 February 2024, 10:31 am
Quick Share

அரசுஅண்ணா திமுக கொண்டு வந்த திட்டங்களை மூடி மறைத்து மூன்று ஆண்டுகளில் திமுக அரசு 3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளதாகவும், இந்த ஆட்சியில் எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் வாங்குவதாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின், 76வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மணலூர் சின்னசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர், கழக துணை பொதுச்செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:- நடைபெற்று வரும் திமுக அரசு, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மறைத்து விட்டது. 2026-ல் அதிமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அமைக்கப்படும். அதற்கு முன்னோட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் அமையும். அதிமுக ஆட்சி காலத்தில் மக்களின் பொற்கால ஆட்சியாக இருந்தது. இந்த அரசு மாணவர்கள், பெண்கள் மீது அக்கறை கிடையாது.

திருமண உதவித் தொகையான தாலிக்கு தங்கம் நிறுத்தி விட்டனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப் நிறுத்தப்பட்டது. விவசாயிகளில் வாழ்வாதாரமாக இருந்த, குடிமராமத்து பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த, ஸ்கூட்டி திட்டம் நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் நடைபெற்று வரும் எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாட்டை கூட, கலைஞர் நாடு என்று பெயர் மாற்றி விடுவார்கள்.

இந்த ஆட்சியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. ஊழல் நிறைந்த ஆட்சியாக உள்ளது. தமிழ்நாட்டின் 5 இலட்சம் கோடி கடனாக இருந்ததை, படிப்படியாக குறைப்போம் என்று கூறிய திமுக அரசு, 7 ஆயிரம் கோடி வட்டி கட்டி வருகிறது. நிதிநிலை மோசமாக உள்ளது. 500-க்கும் மேலே வாக்குறுதி அளித்த திமுக அரசு, எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற திமுக, இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்தும், தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை. தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, ஈழத் தமிழர், மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தியவர் ஜெயலலிதா. காவேரி நதி நீர் பிரச்சனைக்காக, 21 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கினார். திமுக குடும்ப நலனில் மட்டும் அக்கறை காட்டி வருகிறது. நாட்டு நலனின் அக்கறை காட்ட வில்லை. மத்தியில் பாஜக, காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலும் தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை.

சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் பேசவரங்க சபாநாயகர் ஒரு அடியால் மாதிரி ஒரு சர்வதிகாரிமாதிரி ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து கொண்டு இருக்கிறார்..இந்த அரசுஅண்ணா திமுக கொண்டு வந்த திட்டங்களை மூடி மறைத்து மூன்று ஆண்டுகளில் இந்த அரசு 3 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. இந்த ஆட்சியில் எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் வாங்குகின்றனர், இவ்வாறு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.

கூட்டத்தில், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பி.கோபி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் டி.ஆர்.விஜய பாலமுருகன், ஆத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுக பொருளாளர் அந்தோணிராஜ், நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சுகன், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சேடப்பட்டி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 111

0

0