‘சூர்யா என்னை மன்னிச்சிடு’… கடிதம் எழுதி வைத்துவிட்டு அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலை ; பின்னணியில் பகீர் தகவல்..!!!

Author: Babu Lakshmanan
9 October 2023, 5:09 pm
Quick Share

மதுரையில் அங்கன்வாடி பெண் பணியாளர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர் அம்சவல்லி. கடந்த சில நாட்களாக வட்டார குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் பிரசன்னா தேவி, இவருக்கு அதிக பணிச்சுமை கொடுத்ததாக கூறப்படுகிறது.

நாள்தோறும் மாணவர்களின் உயரம், எடை மற்றும் மாணவன் புகைப்படங்களை அலுவலக பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், ஐந்து நாட்களுக்குள் ஆயிரத்து 500 புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார். அவ்வாறு பணி புரியவில்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க எடுப்பேன் என்றும் தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளார்.

மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியதாகவும், மிகுந்த மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதற்கு முன்னதாக, ‘என் தற்கொலைக்கு வட்டார குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் பிரசன்னா தேவி தான் காரணம். சூர்யா என்னை மன்னித்துவிடு,’ என தனது மகனுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அங்கன்வாடி பணியாளர் தற்கொலை செய்து கொண்டது அறிந்த அவருடன் பணிபுரிந்த மதுரை மாவட்டத்திற்கு உரிய அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும், தற்கொலைக்கு காரணமான உயர் அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தி, அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒன்று கூடி உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து, தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் தற்கொலை செய்து கொண்ட பணியாளர் அம்சவல்லியின் உடலை வாங்கிச் சென்றனர்.

Views: - 1926

15

9