முகநூலில் பிட்காயின் விளம்பரம்… ஆர்வத்தில் லிங்க்கை க்ளிக் செய்த நபருக்கு ரூ.12 லட்சம் அம்பேல் ; புகாரின் பேரில் 3 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 10:38 am
Quick Share

தூத்துக்குடியில் முகநூல் பக்கத்தில் பிட்காயின் இன்வெஸ்ட்மென்ட் என்ற விளம்பரத்தின் மூலம் ரூபாய் 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து, ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள whatsapp எண்ணில் தொடர்பு கொண்டு, பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையத்தில் ரூபாய் 12,10,740 முதலீடு செய்துள்ளார்.

இதனையடுத்து, தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர் NCRPல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். மேற்படி ராமர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தனிப்படை அமைத்து மோசடி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில், மேற்படி ராமரை மோசடி செய்த கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் அன்பு கருணாகரன் , என்பவரை கடந்த 3ம் தேதியன்றும், மற்றொரு குற்றவாளியான திருவள்ளுர் காக்கலூர் ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ஓபேத் பால் (38) என்பவரை கடந்த 16ம் தேதியன்றும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மேலும், இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட மற்றொரு குற்றவாளியான திருவள்ளுர் மாவட்டம் புதூர் மின்நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சஞ்சீவ் குமார் என்பவரை நேற்று (23.02.2023) அவரது வீட்டருகே வைத்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த ஒரு
ஐபோனையும் பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வந்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

குற்றவாளி சஞ்சீவ் குமாரின் தனியார் வங்கி கணக்கில் 01.04.2020 முதல் 20.02.2023 வரை ரூ.2,13,44,882.95 பணப்பரிமாற்றமும், மற்றொரு வங்கி கணக்கில் 18.04.2022 முதல் 20.02.2023 வரை ரூ. 3,10,72,841 பணப்பரிமாற்றமும் என மொத்தம் ரூ.5,24,17,643 பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

மேலும், சுமார் 200 வங்கி கணக்குகளை குற்றவாளி ஒபேத் பாலுக்கு அனுப்பி பணப்பரிமாற்றம் செய்யச்சொல்லி, பல மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க உடந்தையாக குற்றவாளி சஞ்சீவ் குமார் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 334

0

0