சாவியை போட்டதும் பின்பக்கமாக சீறிப்பாய்ந்த கார்… கிணற்றுக்குள் விழுந்ததால் விவசாயி பலி ; மகன் கண்முன்னே நடந்த சோகம்!!

Author: Babu Lakshmanan
15 March 2024, 5:01 pm
Quick Share

திண்டுக்கல் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விழுந்த விபத்தில் மகன் கண்முன் விவசாயி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், அ.வெள்ளோட்டில் குடியிருப்பர் வெள்ளிமலை (வயது 53). இவருக்கு அஞ்சுகம் என்ற மனைவியும், கவுசிக் மற்றும் ஆனந்த் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், கவுசிக் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு, சென்னையில் வேலை பார்த்து வருகிறார். ஆனந்த் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார்.
வெள்ளிமலைக்கு வெள்ளோடு அருகே கரடிப்பட்டி பகுதியில் தோட்டம் உள்ளது.

அங்கு கீரை விவசாயம் செய்து அதனை திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று விற்பனை செய்து வருகிறார். கீரையை கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக சில தினங்களுக்கு முன்பு வெள்ளிமலை புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த காரை நேற்று மாலை வெள்ளிமலை ஓட்டி பழக நினைத்தார். அருகில் இருந்த தனது மகன் ஆனந்த்திடம் சொல்லிவிட்டு வெள்ளிமலை காருக்குள் ஏறி அமர்ந்தார். கார் ஏற்கனவே ரிசர்வ் கியரில் இருந்துள்ளது. இதனை கவனிக்காத வெள்ளிமலை காரை ஆன் செய்து காரை இயக்கினார்.

அடுத்த நொடி கார் பின் பக்கமாக சென்ற 15 அடி தூரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. கிணற்றுக்குள் 15 அடி அளவிற்கு தண்ணீர் இருந்ததால் கார் முழுவதுமாக தண்ணீர் மூழ்கியது. இதனைப் பார்த்த அனந்த் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றுக்குள் குதித்து பார்த்தபோது, கார் முழுவதுமாக கிணற்றில் இருந்த தண்ணீரில் மூழ்கி கிடந்தது.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது, விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுள் இறங்கி காருக்குள் இறந்த நிலையில் சிக்கியிருந்த வெள்ளிமலையை மீட்டு தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து காரை மீட்க கிரைன் வரவழைக்கப்பட்டு காரை தூக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அம்பாத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Views: - 111

0

0