ஷேர் ஆட்டோ – கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 2 பெண் தொழிலாளர்கள் உடல் சிதைந்து பலி..!!

Author: Babu Lakshmanan
1 February 2023, 8:53 pm
Quick Share

திருப்போரூர் அருகே ஷேர் ஆட்டோ கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூரைச் சேர்ந்தவர் தசரதன். தனக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவை நாவலூர் மற்றும் திருப்போரூர் இடையே சவாரி ஓட்டி வந்தார்.

இந்நிலையில், கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி 9 பயணிகளுடன் ஆட்டோவை ஓட்டி சென்றபோது, காலவாக்கம் அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் சாலையில் திருமண மண்டபம் ஒன்றின் முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் வாகனங்கள் வரிசைக் கட்டி நின்று கொண்டிருந்தது.

இதனால் சில நிமிடங்கள் நின்ற ஆட்டோ ஓட்டுனர் தசரதன் OMR சாலைத் தடுப்பில் உள்ள இடைவெளியைப் பயன்படுத்தி எதிர் திசையில் திடீரென பயணிக்க ஆரம்பித்தார். ஆலத்தூர் தனியார் நிறுவன அலுவலர் தாமஸ் மாத்யூ என்பவர் திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்திசையில் வந்த ஆட்டோவின் மீது கார் பயங்கரமாக மோதியதால் காரில் இருந்த டிரைவர் மற்றும் ஆட்டோவில் 2 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் ஆட்டோவில் பயணித்த செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விஜயா (44), சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த அம்சவள்ளி (53) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், ஆட்டோவில் பயணம் செய்த சுவாதி (32), ஜோதி (52), செல்வி (40), அஞ்சலை (38), திலகவதி (45), முனுசாமி என்கிற சுரேஷ் (50) ஆகியோரும் ஆட்டோ ஓட்டுனர் தசரதன் (50) ஆகிய 7 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 429

0

0