அதிவேகமாக வந்த டிப்பர் லாரி… தூக்கி வீசப்பட்ட பொதுமக்கள் ; 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி ; செங்கல்பட்டில் கோர விபத்து..!!

Author: Babu Lakshmanan
11 August 2023, 2:04 pm
Quick Share

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பொத்தேரி பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோட்டிவிட்டார். இது குறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் ரயில்வே சாலை சந்திப்பு எதிரில் இன்று (11-8-2023) காலை சென்னை நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மூன்று இருசக்கர வாகனங்களின் மீது எதிர்பாராதவிதமாக மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று தேவையான மீட்பு நடவடிக்கைகளையும், மருத்துவ உதவிகளையும் விரைந்து மேற்கொள்ள கேட்டுக்கொண்டேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பார்த்தசாரதி என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்த்தசாரதி அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கடவும் உத்தரவிட்டுள்ளேன், என முதல்வர் தெரிவித்துள்ளார்.

Views: - 353

0

0