முதல்முறையாக குழந்தைக்கு சாதி, மதம் இல்லை என சான்றிதழ் பெற்ற தந்தை… சாதி ரீதியிலான சலுகைகள் தேவையில்லை எனவும் பேட்டி..!!

Author: Babu Lakshmanan
30 May 2022, 12:38 pm
Quick Share

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஒரு குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை கே.கே.புதுாரை சேர்ந்த நரேஷ் கார்த்திக் (33), தனது மூன்றரை வயது மகளை எல்.கே.ஜி., வகுப்பில் சேர்க்க பல்வேறு பள்ளிகளை நாடினார். விண்ணப்பத்தில் ஜாதி, மதம் குறிப்பிடவில்லை. இதனால், பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் தனது குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை பெற முயன்றார்.

வருவாய் துறை முதல் முறையாக இந்த சான்றிதழ் வழங்கியுள்ளது.நரேஷ் கார்த்திக் கூறியதாவது: பெற்றோர் தங்களது குழந்தைகளின் ஜாதி, மதம் குறித்து குறிப்பிடத் தேவையில்லை என 1973ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம்.

வருவாய் துறையினரை சந்தித்து பேசியபோது அவர்களுக்கும் இதுகுறித்து தெரியவில்லை. கோவை கலெக்டரை தொடர்பு கொண்டபோது அவர் வடக்கு தாசில்தாரை தொடர்புகொள்ள அறிவுறுத்தினார். அதன் பின்னரே குழந்தைக்கு, சான்றிதழ் கிடைத்தது.

எனது குழந்தைக்கு வருங்காலத்தில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் தேவையில்லை. ஜாதியை இணைக்க விண்ணப்பிக்க மாட்டேன் என உறுதி அளித்துள்ளேன். புதிய நடைமுறை என்பதால் சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இனிவரும் குழந்தைகளுக்கு சான்றிதழ் எளிதில் கிடைக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 687

0

0