‘அசிங்கமா இருக்கு… வீட்டுக்கு முன்னாடி சிறுநீர் அடிக்கறாங்க’ ; திமுக மேயர் குடும்பத்தினர் டார்ச்சர்… ஆதாரங்களை வெளியிட்ட பெண்..!!

Author: Babu Lakshmanan
28 August 2023, 6:49 pm
Quick Share

வீட்டை காலி செய்ய வைக்க கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர் அருவறுக்கத்தக்க முறையில் தொந்தரவு செய்கிறார்கள் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திரா கார்டனின் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சரண்யா, கோபிநாத் தம்பதியினர். இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயரின் குடும்பத்தினர், தங்கள் வீட்டை காலி செய்ய வைக்க பல்வேறு விதங்களில் தொந்தரவு கொடுத்து மிரட்டுவதாகக் கூறியும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய சரண்யா, தாங்கள் குடியிருக்கும் காம்பவுண்ட்டில் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமாரின் தாயார் காளியம்மாள் மற்றும் தம்பி குமார். சில மாதங்களுக்கு முன்பு குமார், தங்களிடம் 15,000 ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதில் 5000 ரூபாயை மட்டுமே திருப்பி தந்ததாகவும், மேயர் கல்பான ஆனந்த்குமார் மேயராக பொறுப்பேற்றதில் இருந்து மீதி தொகையை தரவில்லை என கூறினார்.

இந்நிலையில், மேயர் கல்பனா ஆனந்த்குமார், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக குமார் வீட்டில் தங்கி இருக்கிறார்.

இந்நிலையில் தான் வசித்து வரும் வீட்டை காலி செய்ய வைக்க மேயரின் தம்பி குமார் பல்வேறு விதங்களில் டார்ச்சர் செய்வதாகவும், தங்கள் வீட்டின் பின்னால் அழுகிய பழங்கள், கோழி இறைச்சிகள், உள்ளிட்டவற்றை குமார் வீசி செல்வதாகவும், அருவறுக்கத்தக்க வகையில் சிறுநீரை டப்பாவில் பிடித்து வந்து தங்கள் வீட்டின் சமையலறை பகுதியில் ஊற்றி செல்வதாகவும், அதுமட்டுமின்றி பூசணிக்காய், எலுமிச்சை இவற்றை கொண்டு மாந்திரிகம் போன்ற செயல்கள் செய்து வைத்து தொந்தரவு அளிப்பதாக கூறினார்.

மேலும், தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியாதவாறு அவர்களது வாகனங்களை நிறுத்தி விடுவதாகவும் கூறினார். இவற்றையெல்லாம் கேமரா மூலம் பதிவு செய்துள்ள நிலையில் வீடியோ பதிவு செய்ததை அறிந்து குமார், சில ஆட்களைக் கொண்டு மிரட்டுவதாகவும், இந்நிலையில் தங்களுக்கு உயிர்பாதுகாப்பு வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மேயர் குடியிருந்த ஆர்.எஸ்.புரம் அரசு குடியிருப்பில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்ததாக தெரிகிறது எனவும், எனவே தான் அவர் மீண்டும் இங்கேயே வந்துவிட்டதாக சரண்யா கூறினார்.

Views: - 262

0

0