இது கேவலமான செயல்.. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்படும்… ஜி. ராமகிருஷ்ணன் உறுதி..!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 11:55 am
Quick Share

நெல்லை ; மாநிலத்திற்கு மாநிலம் கட்சிகளிடம் அரசியல் ரீதியிலான வேறுபாடுகள் இருந்தாலும், அகில இந்திய அளவில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாக கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழக முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி, நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லசிவம் நூற்றாண்டு விழாவையொட்டி மரம் நடு விழா நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது :- தமிழக முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லசிவம் நூற்றாண்டு விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் அம்பாசமுத்திரத்தில் இன்று நடைபெறுகிறது. அதில் நான் உட்பட மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாள் விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா மதுரை அமேரிக்கன் கல்லூரியில் இறுதி தேர்வு எழுதுவதற்கு 15 தினங்களள் உள்ள நிலையில், சுதந்திரத்திற்கான போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டதால் அவர் தேர்வு எழுத முடியாத நிலை உருவானது. இதனால் அவருக்கு பட்டம் கிடைக்காமல் போனது. இந்த தகவலை அறிந்த தமிழக முதல்வர் மதுரை பல்கலைகழகம் சங்கரய்யாவிற்கு பட்டம் வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.
அது வரவேற்கத்தக்கது.

நாளை மற்றும் நாளை மறுதினம் பெங்களூருவில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. பாஜகவை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து கூட்டம் நடத்தப்படுகிறது. பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஆட்சி முடியும் வரை பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம் என உறுதியோடு இருந்தார். பிரதமர் அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் அமெரிக்க ஜனாதிபதியுடன் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டிய நிலை உருவானதும், வேறு வழியில்லாத சூழலில் பத்திரிகையாளர்கள் மணிப்பூர் கலவரத்தை மையப்படுத்தி மத மோதல்கள் நடைபெறுகிறது. சிறுபான்மையினர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக பிரதமரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு எனது டிஎன்ஏவில் ஜனநாயகம் இருக்கிறது என பிரதமர் பதில் அளித்தார். ஆனால், இதுவரை மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்ட சூழலிலும் 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இருந்து பல்லாயிரம் நபர்கள் வெளியிடத்திற்கு குடி பெயர்ந்த சூழலிலும் அங்கு நடக்கும் கலவரத்தை பாரத பிரதமர் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. மணிப்பூரில் நடக்கும் மோதலுக்கு பாஜக ஆர் எஸ் எஸ் – ன் அணுகுமுறை சரியில்லாதது தான் காரணம்.

இந்திய நாட்டில் பழங்குடியின மக்களுக்கென மாநில வாரியாக தனித்தனி சட்டங்கள் உள்ளது. யாரிடமும் எந்த கருத்தும் கேட்கப்படாமல் பொதுச்சவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை கொண்டு வந்து தேர்தல் ஆதாயத்தை வைத்து மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் செயலை செய்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமனம் செய்து அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை பாஜக செய்து வருகிறது.

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தேர்தலின் போது மக்கள் பிரச்சினை பற்றியோ, மக்களுக்கு ஆட்சியில் செய்த நன்மைகளைப் பற்றியோ, ஒருபோதும் பாரதிய ஜனதா கட்சி பேசாது. மக்களை பிளவுபடுத்தி தேர்தலை சந்திப்பது தான் அவர்களது வேலை. விலைவாசி உயர்வு விலையை கட்டுப்படுத்துவது போன்றவைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. உணவு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தடுக்க மத்திய அரசு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் தமிழக அரசு தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலை கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்து வருவது வரவேற்கத்தக்கது. தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசை எதிர்பார்க்காமல் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்த வருகிறது. மத்திய பாஜக அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. வரும் 23ஆம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார். ஜல்லிக்கட்டு நடத்தக் கடும் எதிர்ப்புகள் இருந்த நிலையிலும், இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவை விதிவிலக்கு அளித்து உத்தரவிட்டது. நீட் பிரச்சனையில் விதிவிலக்கு கேட்டு தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் ஒன்றிணைந்து சட்டம் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஜனாதிபதி அதற்கான ஆணையை பிறப்பிக்க முடியும். அதற்கான எந்த முயற்சியையும் பாஜக செய்யாமல் இருந்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை நீதிமன்றம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. வரலாற்றில் எங்கும் நடக்காத ஒரு செயல். 60க்கும் மேற்பட்டோர் உள்ளாட்சி மன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 34 சதவீத இடங்களுக்கு யாரையும் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய விடாமல், மேற்கு வங்கத்தின் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தடுத்தது.

தற்போது முற்றிலும் அகற்றப்படாமல் அந்த பிரச்சனை 15 சதவீதமாக குறைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி குறைந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. மேற்குவங்கத்தில் நடந்தது தேர்தலே கிடையாது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த நோக்கம். மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் ஒத்து வராது. அதேபோல், கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இடையேயும், டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையேயும் எதிர்புக்குகள் இருந்து வருகிறது. மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் கட்சிகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும், அகில இந்திய அளவில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது.

தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி எதை வேண்டுமானாலும் செய்யும். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஆயிரம் கோடி ஊழல் செய்தவர் பாஜக கூட்டணியில் சேர்ந்து அமைச்சரான உடன் புனிதர் ஆகிவிட்டார். அதிமுகவில் பல முன்னணி அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்தியா முழுவதும் பலர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அதன் நிலை இப்போது என்ன என்பதை தெரியாத நிலை இருக்கிறது. எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் பாஜகவில் சேர்ந்தால் புனிதராகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கையை பாஜக செய்து வருகிறது. மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம் என தெரிவித்தார்.

Views: - 171

0

0