கொத்து பரோட்டா கேட்டு பிரியாணி கடையை சூறையாடிய போதை கும்பல் ; நாலாபுறமும் பறந்த சாம்பார் வாளி..!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 3:44 pm
Quick Share

வத்தலகுண்டில் பிரியாணி ஹோட்டலில் கொத்து புரோட்டா கேட்டு 6 பேர் கொண்ட கும்பல் பரோட்டா மாஸ்டரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பெரியகுளம் மெயின் ரோட்டில் வத்தலகுண்டை சேர்ந்த இம்தா துல்லா (32) என்பவருக்கு சொந்தமான பிரியாணி ஹோட்டல் உள்ளது. இக்கடையில் நேற்று இரவு அருகில் உள்ள அரசு டாஸ்மாக் மது கடையில் மது அருந்திவிட்டு மது போதையில் பிரியாணி ஹோட்டலுக்கு சென்ற 6 பேர் கொண்ட கும்பல் பிரியாணி ஹோட்டலில் கொத்து பரோட்டா கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

கொத்து பரோட்டா இல்லை என மாஸ்டர் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், பரோட்டா மாஸ்டர் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த, முத்து (24) என்பவரை சரமாரியாக தாக்கினர். மேலும், ஹோட்டலில் சேர், டேபிள் மற்றும் பாத்திரங்களை அடித்து சேதப்படுத்தினர். அப்போது, ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பெரும் அச்சத்துடன் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

புரோட்டா மாஸ்டரை சரமாரியா தாக்கிய அந்த கும்பல், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து புரோட்டா மாஸ்டர் முத்து என்பவர் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் கொத்து புரோடா கேட்டு தகராறில் ஈடுபட்டு புரோட்டா மாஸ்டரை சரமாரியாக தாக்கிய சி.சி.டிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 330

0

0