இளம் மனைவியை போதையில் வெட்டிக் கொன்ற கணவன் ; கிராமத்தையே உலுக்கிய சம்பவம்.. ஆதரவற்றுப் போன 3 பிஞ்சு குழந்தைகள்..!!

Author: Babu Lakshmanan
14 August 2023, 4:51 pm
Quick Share

காஞ்சிபுரம் அருகே தாலி கட்டிய இளம் மனைவியை மது போதையில் இருந்த கணவன் வெட்டி கொன்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள் (19). செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 25.).

புருஷோத்தமன் மற்றும் முனியம்மாள் ஆகியோர்களுக்கு கடந்த நான்கு வருடம் முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். புருஷோத்தமன் முனியம்மாள் தம்பதிகள் ஆர்ப்பாக்கம் கிராமத்திலேயே கூலி வேலை செய்து கொண்டு தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார்கள்.

மது பழக்கத்துக்கு அடிமையான புருஷோத்தமன் அவ்வப்போது குடித்துவிட்டு வந்து தன்னுடைய மனைவியுடன் சண்டை போடுவது வாடிக்கையானது என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் நான்கு முப்பது மணி அளவில் ஃபுல் மது போதையில் வந்த புருஷோத்தமன் தன்னுடைய மனைவி முனியம்மாளுடன் சண்டை இட்டுள்ளார். அதில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆவேசமடைந்த புருஷோத்தமன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முனியம்மாளின் கழுத்தில் ஒரே போடாக போட்டார்.

கத்தியால் வெட்டியதில் முனியம்மாளின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்து முனியம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

முனியம்மாளின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தப்பி ஓட முயன்ற புருஷோத்தமனை பிடித்து மாகரல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த மாகரல் காவல்துறையினர் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த் ஆகியோர் புருஷோத்தமனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், தன்னுடைய இளம் மனைவியை வெட்டி கொன்ற போதை கணவன் புருஷோத்தமனை அவ்வூர் மக்கள் கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

மது பழக்கத்துக்கு அடிமையான புருஷோத்தமன், தன்னுடைய மனைவியை கொன்று விட்டு தானும் சிறைக்கு சென்ற நிலையில், அந்த மூன்று குழந்தைகளையும் யார் காப்பாற்றுவது? என்ற கேள்வி எழுகின்றது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 368

0

1