மயக்கத்தில் இருந்து மீண்டு எழ முடியாமல் தவிக்கும் யானை : இரண்டாவது நாளாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2022, 4:12 pm
Dizzy Elephant - Updatenews360
Quick Share

கோவை : வனத்தை ஒட்டிய தனியார் தோட்டத்தில் உடல்நல குறைவால் மயங்கி விழுந்த பெண் யானைக்கு 2வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலை பெரியதடாகம் அடுத்த அனுவாவி சுப்ரமணியம் கோவிலுக்கு செல்லும் வழியில் தனியார் பட்டா நிலத்தில் காட்டு யானை ஒன்று உடல்நல குறைவால் நடக்க இயலாமல் படுத்து கொண்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மயங்கி விழுந்துள்ள யானைக்கு கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், முதல் நாள் இரத்த நாளம் வழியாக 40 க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள், மருந்துகளும், உப்பு வெந்நீர் ஒத்தடம் ஆகியவையும் வழங்கப்பட்டன.

மேலும், பழங்கள், வெல்லம் ஆகியவையும் புளி, மிளகு, சுக்கு, மஞ்சள் கலந்த சித்தா சூரணமும் வழங்கப்பட்டன. யானை படுத்துள்ள பகுதியை சுற்றிலும் சாமியானா பந்தல் போடப்பட்டு நிழல் ஏற்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, 2வது நாளும் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Views: - 792

0

0