காரை வழிமறித்து தாக்கிய காட்டு யானைகள்… எகிறி குதித்து தப்பியோடிய பெண்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 December 2022, 12:53 pm
Quick Share

ஈரோடு ; சத்தியமங்கலம் அருகே காரை வழிமறித்த காட்டு யானைகளிடம் இருந்து, காரில் வந்தவர்கள் தப்பியோடிய காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் நிற்பதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.

குறிப்பாக, கடந்த சில நாட்களாக ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் முகாமிட்டு, தாளவாடியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை குறி வைத்து காத்து நிற்கின்றன. இதனால், அவ்வழியாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கரம் வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு கர்நாடகாவில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி காரில் குடும்பத்துடன் வந்து கொண்டிருந்த நபர்களை, ஆசனூர் அருகே குட்டியுடன் சாலையில் உலா வந்த காட்டு யானைகள் காரை வழிமறித்து நின்றது.

இதனால் அச்சைமடைந்த காரின் உள்ளே இருந்த நபர்கள் காரின் கதவைத் திறந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். இதில் காரில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பெண்மணி ஒருவரை, அவருடன் வந்த நபர், கையில் தூக்கியவாறு வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

பின்னர், காட்டு யானைகள் காரின் பின்புறம் தும்பிக்கையால் தாக்கியும், காலால் உதைத்தும், காரை சேதப்படுத்தி சென்றது. இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 341

0

0