நிலவில் சாதனை படைக்கும் சந்திரயான் 3…. பூமியில் சாதனை படைக்கும் எடப்பாடியார் மாநாடு; ஆர் பி உதயகுமார் பெருமிதம்

Author: Babu Lakshmanan
23 August 2023, 4:02 pm
Quick Share

சந்திரயான் 3 நிலவில் சாதனை படைக்கிறது என்றும், எடப்பாடியார் மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித்தமிழர் விருதை வழங்கியதையொட்டி தெப்பக்குளத்தில் சௌராஷ்ட்ரா கிளப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், கே தமிழரசன் ,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது; தமிழகத்தில் பல்வேறு புரட்சிகரமான சாதனை திட்டங்களை எடப்பாடியார் வழங்கியதால், புரட்சித்தமிழர் என்ற பட்டத்தை மதுரை மக்கள் சூட்டினார்கள்.  ஆனால், அவர் என்ன சாதனை செய்தார் என்று சில ஞானசூனியங்கள் பேசி வருகிறார்கள். அவர் செய்த சாதனைத் திட்டங்களை படித்துப் பார்த்தாலே தெரியும், அந்த பட்டத்திற்கு அவர் தகுதியானவர் என்று.

அது மட்டும் அல்ல  மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் உலக பொதுமறையாகவும், தேசிய திருமுறையாகவும் விளங்கும், திருக்குறளை தேசிய நூலகமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழ்நாட்டிலும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியை கட்டாயமாக பாட மொழியாகவும்,  பயின்று மொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 9,10, 11, 12, 13, 14, 15 ஆகிய தீர்மானங்கள் திமுக அரசை கண்டித்தும், ஸ்டாலினை கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் 16வது தீர்மானம் கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொய் மூட்டைகளை ஸ்டாலின் அவிழ்த்து விட்டு, திமுக அரசு தாரைவார்த்து கொடுத்ததை திருப்பி மாற்றி எழுத ஸ்டாலின் முயற்சிக்கிறார். இந்த கட்சத்தீவு பிரச்சனையில் கூட அம்மா இருக்கும் பொழுது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது அதில், வருவாய்த் துறையும் அதில் இணைக்கப்பட்டது. அந்த கட்சத் தீவை மீண்டும் மீட்டு தர மத்திய அரசுக்கும்,மாநில அரசுக்கும் கோரிக்கை இதில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அம்மாவின் ஆட்சி மலர தொடர்ந்து அயராது களப்பணி ஆற்றிவரும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து இதுவரை யாரும் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் அமைக்கும் வியூகத்தின் படி செயல்படவும் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்கவும் இதில் சூளுரை ஏற்க்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், புரிந்தும் புரியாமல், ஊடக விவாதங்களில் சிலர் பேசி வருவதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை நகைச்சுவையாக தான் பார்க்கிறார்கள. மென்பொருள் உற்பத்தியில் முதலிடத்தில் வந்ததாக முதலமைச்சர் கூறுகிறார், ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியும் இன்றைக்கு தமிழகத்தில் கடன்சுமை முதலிடத்தில் உள்ளது.

ஸ்டாலின் பொய் மூட்டைகளை யாரும் நம்ப தயாராக இல்லை அதை மட்டும் அல்ல,அவரின் வாரிசு உதயநிதியும் பேச்சையும் யாரும் நம்ப தயாராகவில்லை. ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் நீட் தேர்வு ரத்து செய்வார் என்று உதயநிதி கூறுகிறார். கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்று கொக்கு நினைத்து, கடைசியில் குடல் வற்றி இறந்தது போல் திமுகவின் பேச்சு உள்ளது.  சந்திரயான் 3 நிலவில் சாதனை படைத்துள்ளது. எடப்பாடியார் தலைமையிலான நடைபெற்ற மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளது, என்று கூறினார்.

Views: - 215

0

0