தமிழகத்தில் இவ்வளவு நடக்குது… இன்னும் ஏன் சர்வாதிகாரியாக மாறல..? CM ஸ்டாலினுக்கு செல்லூர் ராஜு கேள்வி..!!

Author: Babu Lakshmanan
12 March 2024, 2:44 pm
Quick Share

சூரசம்ஹாரத்தில் அரக்கனை வதம் செய்து மக்களை முருக கடவுள் காப்பது போல எடப்பாடி பழனிசாமி மக்களை காக்க போராட்டங்களை நடத்தி வருகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் போதை பொருள் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி மதுரையில் அதிமுகவினர் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மதுரை பெரியார் பேருந்து நிலைய சந்திப்பில் இருந்து நேதாஜி சாலை, மேலமாசி வீதி சந்திப்பு, பாலமுருகன் கோவில் வழியாக ஜான்சி ராணி பூங்கா வரை நடைப்பெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் 1,000 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கைகளை கோர்த்து மனித சங்கிலி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போதைப்பொருள்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போதைப்பொருளை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு கூறுகையில் “ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் போதை பொருட்கள் தற்போது தமிழ்நாட்டில் புழக்கத்திற்கு வந்துள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் அதிக அளவில் ஈடுபட்டு விடுகிறார்கள். தமிழகத்தில் நிலவும் போதை பொருள் கடத்தலை தமிழக காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.

அமெரிக்கா உளவுத்துறை கூறியதன் அடிப்படையில் கடத்தல் தற்போது தெரிய வந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தான் தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என கூறினார். முதலமைச்சர் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுத்தாரா?,

அதன் பின்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்கிறது, திமுக கட்சி தொடர்ந்தால் விலைவாசியேற்றம், பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள், திருட்டு கடத்தல் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும், தமிழகத்தில் அனைத்து விதமான சட்ட விரோதமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்.

ஜாபர் சாதிக் மீது 2013ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜாபர் சாதிக் மீண்டும் போதைப்பொருள் கடத்தலை தொடங்கியுள்ளார், பல்வேறு நிகழ்வுகளின் அடிப்படையில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளதால் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போதைய காவல்துறையை வைத்து தான் அதிமுக ஆட்சி காலத்தில் ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சூரசம்ஹாரத்தில் அரக்கனை வதம் செய்து மக்களை முருக கடவுள் காப்பது போல எடப்பாடி பழனிசாமி மக்களை காக்க போராட்டங்களை நடத்தி வருகிறார், என கூறினார்.

Views: - 88

0

0