‘சின்னப்புள்ள தனமா இல்ல… எப்படி இருந்த செந்தில் பாலாஜி இப்படி ஆயிட்டாரு’… அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்…!!

Author: Babu Lakshmanan
18 September 2023, 10:08 am
Sellur Raju - Updatenews360
Quick Share

திமுக ஆட்சியை விரைவில் பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை அதிமுகவுக்கு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் டி எம் கோர்ட் பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது ;- மதுரையில் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூன்றாவது மாபெரும் பொதுக்கூட்டமானது நடைபெற்றது.

இந்த நாட்டின் பொதுக்களத்தில் நிற்கும் உரிமையை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் அண்ணா, பெரியார். பெண்கள் பொது வாழ்க்கையில் வரவும் வித்திட்டவர்கள் இவர்கள்தான். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் அண்ணா. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று பெயர் பெற்றவர்.

திமுக அண்ணாவால் உருவாக்கப்பட்டது. ஐந்து தலைவர்களால் உருவாக்கப்பட்டது திமுக, அண்ணா இருக்கும் வரை கலைஞரை முன்னிலைப்படுத்தவில்லை. தாய் எப்படி அனைத்து பிள்ளைகளும் ஒரே மாதிரி வளர்ப்பாரோ, அதேபோன்றுதான் அண்ணா அனைவரையும் ஒன்றாக நினைத்தார். பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அண்ணாவிற்கு உண்டு. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலத்திலும் ஆணுக்கு பெண் நிகர் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.

தற்போது அரசியல் தலைவர்கள் நட்சத்திர விடுதிகளில் தங்கி பிரச்சாரம் செய்கிறார்கள். சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் பட்டினியாக கிடந்து, தொண்டர் வீட்டில் தங்கி கட்சியை வளர்த்தவர் அண்ணா.

திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர். திமுகவிலிருந்து பிரிந்து வந்த பிறகு அதிமுகவை உருவாக்கினார். இருப்பினும் அண்ணாவை நினைவு கூறும் வகையில் அதிமுகவின் கொடியில் அண்ணாவின் திருவுருவ படத்தை பொறித்தார். இறந்தும் இறைவனாக எம்ஜிஆர் இருக்கிறார். இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

எம்ஜிஆருக்கு அரசியல் பண்ண தெரியுமா என்று கேட்டவர் கருணாநிதி. ஒரு மாத காலம் தாங்குமா என்று கேட்டார். சுமார் 11 ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து கோட்டை பக்கமே கருணாநிதி வரவிடாமல் செய்தவர். 6000 மைல் தூரத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டு 1984 ஆம் ஆண்டு மாபெரும் வெற்றி பெற்றவர். தான் மட்டும் ஜெயிச்சது இல்லாமல், தன்னை நம்பிய கூட்டணி கட்சிகளையும் ஜெயிக்க வைத்து ஆட்சியை பிடித்தார் எம்ஜிஆர்.

அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா யாரும் வாரிசு அரசியல் செய்யவில்லை. தன்னுடைய வாரிசுகளையும் கொண்டு வரவில்லை. ஜெயலலிதா பெண் குளத்தின் தலைமகளாக விளங்கினார். அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் மூடு விழாக் கண்டுள்ளது.

மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் இருக்கிறது. அதற்காகத்தான் கொடுக்கிறார்கள். திமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடையில் மூடப்படும், மது ஆலைகள் மூடப்படும், என கனிமொழி தெரிவித்தார். ஆனால் மூடவில்லை. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர் கருணாநிதி என சர்க்காரியா கமிட்டியே கூறியது. தமிழகத்தில் வரி மேல் வரி வைத்து கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். பாட்டிலுக்கு பத்து ரூபாய் வைத்து சுமார் 3000 கோடி அரசுக்கு வர வேண்டியது, குடும்பத்தில் ஒருவருக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள்.

எப்படி இருந்த செந்தில் பாலாஜி இப்படி ஆயிட்டார். அவரை கைது செய்யும் போது சின்ன பிள்ளை மாதிரி அழுது கொண்டிருக்கிறார். நீதிபதியே கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதற்கு இலாக இல்லாத அமைச்சர் பதவி என்று. இரண்டு ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடியை கொள்ளை அடித்ததாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து, அவரின் அமைச்சர் பதவி மாற்றம் செய்யப்பட்டது.

வாக்குறுதிகள் 99 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக கூறுகிறார்கள். பொம்மை முதலமைச்சர் ஆகவே இருக்கிறார் எழுதிக் கொடுப்பதை பேசுகிறார். நாகப்பட்டினத்தில் மீனவர்கள் சுடப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை நலம் விசாரிக்கவில்லை. திமுக ஆட்சியை விரைவில் பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை அதிமுகவுக்கு வழங்க வேண்டும், என தெரிவித்தார்

Views: - 230

0

0