தமிழகத்தில் அதிகரிக்கும் நோய் பரவல்… மூடி மறைக்கும் திமுக அரசு ; விஜயபாஸ்கர் பகீர் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
16 December 2023, 1:49 pm
Quick Share

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், தமிழக அரசு காய்ச்சல் தரவுகளை உண்மையை மூடி மறைப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :- ஏற்கனவே தமிழகத்தில் நோய் தொற்று பரவுவது குறித்து ஏற்கனவே பல முறை எச்சரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் தமிழக அரசும், சுகாதாரத்துறையும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றசாட்டை முன் வைக்கிறேன்.

தமிழக அரசு காய்ச்சல் தொடர்பான உண்மையான தரவுகளை மூடி மறைக்கிறது. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் ஒரே நாளில் 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 768 கொரோனா பாதிப்பை கேரளா அரசு உறுதி செய்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உள்ளது, என்ன மாதிரியான காய்ச்சல் என்பததை கண்டறிய தமிழக அரசு சோதனைகளை மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவிலும் 12 சதவீதம் கொரோனா பாதிப்பு உள்ளது. சிங்கப்பூர், மலேசியாவிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் எந்த மாதிரியாக காய்ச்சல் என்பதை கண்டறிய கொரோனா சோதனையை அரசு நடத்த வேண்டும். எந்த மாதிரியான காய்ச்சல் பரவுகிறது என்பதை இந்த அரசு வெளிப்படையாக சொல்ல வேண்டும்,

ஒமிக்ரைன் வைரஸின் புதிய வகையான் JN1 தொற்று அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இதனை அரசு கொண்டு கொள்ளாமல் விட்டால், பெரிய விளைவுகளை ஏற்படும். அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு வரும் நிலையில் விமான நிலையங்களில் சோதனையை தமிழக அரசு தீவிர படுத்த வேண்டும்.

சுகாதாரத்துறை ICU வில் தான் உள்ளது. அதை நார்மல் வார்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். அரசு கூடுதல் கவனம் செலுத்தி நோய் தொற்று பாதிப்புகளை தடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதேபோன்று சர்வதேச விமான நிலையங்களில் சோதனையை அதிகப்படுத்த வேண்டும்.

பொதுமக்களை எந்தவிதமான பதட்டத்திற்கும் உள்ளாக்காமல் இது போன்ற செயல்களில் அரசு ஈடுபட வேண்டும் உண்மையான நிலவரத்தை அரசு வெளிப்படை தன்மையோடு அறிவிக்க வேண்டும். பொதுமக்களிடம் சுயமாக மருந்துகளை உட்கொள்ள கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோன்று மருத்துவமனைகளிலும் பேராசிட்டமால் சீராய்டு உள்ளிட்ட மருந்துகளை அதிகம் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்த வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 372

0

0