சாலையோர பழ வியாபாரியுடன் தகராறு… கட்டையால் தாக்கி 2 இளைஞர்கள் அராஜகம்… ஷாக்கிங் சிசிடிவி காட்சி!!!

Author: Babu Lakshmanan
26 December 2023, 9:30 am
Quick Share

பழனியில் சாலையோர பழ வியாபாரியை இரண்டு இளைஞர்கள் கட்டையால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் சாலையில் உள்ள சாமி தியேட்டர் அருகே வாழைப்பழ வியாபாரம் செய்து வருபவர் வெள்ளைச்சாமி. இவர் தினமும் மாலை வேளையில் தள்ளு வண்டியில் வாழைப்பழம் வைத்து வியாபாரம் செய்து வருவது வழக்கம்‌. இந்நிலையில் வழகக்கம் போல திங்கள் கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியில் உள்ள தெரசம்மாள் காலணியை சேர்ந்த குழந்தை இயேசு மற்றும் சக்தி என்கிற இரண்டு இளைஞர்கள் இருவரும் அங்கு வந்தனர். அப்போது, அருகில் இருந்த டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த பழ வியாபாரி வெள்ளைச்சாமியிடம், குழந்தை இயேசு மற்றும் சக்தி ஆகிய இருவரும் தகராறு செய்தனர்.

தொடர்ந்து இரண்டு பேரும் சேர்ந்து வெள்ளைச்சாமியை தாக்கி, கீழே தள்ளிவிட்டு டீக்கடையில் இருந்த விறகு கட்டையை எடுத்து பழ வியாபாரி வெள்ளைச்சாமியின் தலையில் அடித்தனர். இதில் வெள்ளைச்சாமி மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது‌. இதையடுத்து தகராறில் ஈடுபட்ட இருவரும் தப்பி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர போலீசார், படுகாயமடைந்த வெள்ளைச்சாமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அபப்குதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பழ வியாபாரியை தாக்கிவிட்டு தலைமறைவான குழந்தை இயேசு மற்றும் சக்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைதான இருவரும் வேலைக்கு செல்லாமல் அப்பகுதியில் அடிக்கடி ரவுடித்தனம் செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏழை பல வியாபாரியை கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Views: - 275

0

0