மாமியாரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பல் : தட்டிக் கேட்ட மருமகன் அடித்துக் கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2023, 3:44 pm
Murder - Updatenews360
Quick Share

திண்டுக்கல் மாவட்டம் உண்டாரப்பட்டி அருகே உள்ள ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோசுவா (வயது 28), விவசாயி. இவருக்கு கிருஷ்டி என்ற மனைவியும் 6 மற்றும் 3 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் எட்வின் ஜோஸ்வாவின் மாமியார் திண்டுக்கல் அருகே உள்ள முத்தழகுபட்டியில் தனது வீட்டின் அருகே உள்ள புறம்போக்கு இடத்தில் ஷெட் அமைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் புறம்போக்கு இடத்தில் ஷெட் அமைத்ததால், எனக்கு நீ பணம் கொடுக்க வேண்டும் என்று மேரியை மிரட்டி வந்துள்ளார். ஆனால் மேரி அலெக்சுக்கு பணம் தர மறுத்துள்ளார். மேலும் அலெக்ஸ் பணம் கேட்டு மேரிக்கு போன் செய்த போது, மேரி தனது மருமகனான எட்வின் ஜோஸ்வாவிடம் செல்போனை கொடுத்து பேச சொல்லி உள்ளார்.

அப்போது செல்போனில் பேசிய அலெக்சுக்கும் எட்வின் ஜோஸ்வாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஜோஸ்வா தனது நண்பர்களுடன் உண்டார்பட்டிக்கு வந்துள்ளார். அதன் பிறகு எட்வின் ஜோஸ்வாவை சந்தன வர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே வருமாறு கூறியுள்ளனர்.

அங்கே சென்ற எட்வின் ஜோஸ்வாவிற்கும், அலெக்ஸ் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் அலெக்ஸ் தரப்பினர் ஜோஸ் எட்வின் ஜோஸ்வாவை கடுமையாக தாக்கி விட்டு, அவரின் செல்போனை பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எட்வின் ஜோஸ்வாவை அவரது உறவினர்கள் மீட்டு திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சையில் இருந்த எட்வின் ஜோஸ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து எட்வின் ஜோஸ்வாவின் மனைவி கிருஷ்டி கொடுத்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 266

0

0