தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. மத்திய அரசுக்கு நன்றி கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 1:45 pm
CM - Updatenews360
Quick Share

கடந்த 2022 செப்டம்பரில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், இலவசமாக இருந்த ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட பாக்கெட் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை செய்தது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிப்பில் சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக் கொள்கை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை இறக்குமதி இலவசம் என்ற கொள்கை மாற்றியமைக்கப்பட்டு, ரூ.20 க்கு குறைவான விலை கொண்ட சிகரெட் லைட்டர்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஒரு லைட்டரின் சிஐஎஃப் (CIF) மதிப்பு ரூ.20 அல்லது அதற்கு மேல் இருந்தால் இறக்குமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாக்கெட் சிகரெட் லைட்டர்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுத்ததற்காக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு தமிழகத்தின் தீப்பெட்டி தொழிலில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.

Views: - 219

0

0