ஜெயிலர் பட வெளியீட்டை விநோதமாக கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்.. நெகிழ்ந்து போன மதுரை ஜெயில் டிஐஜி…!!

Author: Babu Lakshmanan
31 July 2023, 4:45 pm
Quick Share

ஜெயிலர் திரைப்படம் வெளியீட்டை முன்னிட்டு சிறை நூலகத்திற்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் இசைக்கருவிகளை வழங்கிய ரசிகர் மன்றத்தினர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள ஜெயிலர் படத்தை வரவேற்கும் விதமாக மதுரை மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறை கைதிகள் படிப்பதற்காக ரூ.1 லட்சம் மதிப்பிலான இலவச புத்தகங்கள் மற்றும் மியூசிக்கல் கீ போர்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டு உபகரணங்களை ரஜினி ரசிகர்கள் பால.நமச்சிவாயம், கோல்டன் சரவணன், அழகர்சாமி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி குமாரவேல் உள்ளிட்டோர் வழங்கினார்கள்.

மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்றத்தின் சார்பில் மதுரை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 169வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் வகையிலான கதை அம்சம் என்பதால், ரசிகர்கள், அதனை முன்னிறுத்தும் வகையில் மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மதுரை மத்திய சிறையில் உள்ள நூலகத்திற்கு 50 ஆயிரம் மதிப்பிலான 247 புத்தகங்கள் மற்றும் பியானோ இசைக்கருவி, ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை சிறைத்துறை டிஐஜி பழனியிடம் வழங்கினர்.

அரசியல், இலக்கியம், ஆன்மீகம், திருக்குறள், சட்டம், வரலாற்று புத்தகங்கள், நாவல்கள், வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள், பகவத்கீதை, குர்ஆன், பைபிள் உள்ளிட்ட மும்மத நூல்கள் உள்ளிட்டவைகளை வழங்கினர்.

புத்தகங்களை வழங்கியதை தொடர்ந்து ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, நடிகர் ரஜினி மது அருந்தக்கூடாது என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததை நிறைவேற்றும் வகையில், இனி மது அருந்தமாட்டோம் என டிஐஜி பழனி முன்பாக வாக்குறுதி எடுத்துக்கொண்டனர். புத்தகங்கள் வழங்கிய ரஜினி ரசிகர் மன்றத்தினருக்கு சிறைத்துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பாலதம்புராஜ் பேசுகையில், “சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் வகையில் புத்தகங்களை வழங்கியுள்ளோம். மேலும், டிஐஜி முன்பாக இனி மது அருந்தமாட்டோம் என உறுதி ஏற்றுள்ளோம்,” என்றார்.

சிறைத்துறை டிஐஜி பழனி பேசியபோது : ரஜினி ரசிகர்களின் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது என்றார்.

Views: - 388

0

0