காஞ்சிபுரம் அருகே வேங்கை வயல் போல சம்பவம்… அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக புகார் ; காவல்துறையினர் விசாரணை!!

Author: Babu Lakshmanan
21 November 2023, 4:32 pm
Quick Share

காஞ்சிபுரம் அருகே திருவந்தார் கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறுபினாயூர் ஊராட்சிக்குட்பட்ட திருவந்தார் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 96 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள 500 லிட்டர் கொள்ளளவு, ஆறடி அகலம் உள்ள குடிநீர் தொட்டியில் நேற்று யாரோ சில மர்ம நபர்கள் மலத்தை கலந்து விட்டனர் என்ற தகவல் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பரவியது.

இன்று காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் குடிநீர் குடிக்க குழாயை திறந்தபோது மஞ்சள் கலந்த குடிநீர் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் தொட்டியில் யாரோ சிலர் மலம் கலந்துவிட்டனர் என தகவல் அப்பகுதியில் பரவி மக்களிடையே மிகுந்த பதட்டத்தை உண்டாக்கி உள்ளது.

மாணவ, மாணவிகளின் புகாரைத் தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் மஞ்சள் நிறம் கலந்த குடிநீர் வந்ததை கண்டு, சாலவாக்கம் காவல் துறையினருக்கும், மாவட்ட கல்வித் துறைவினருக்கும், மாவட்ட வருவாய் துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சாலவாக்கம் வந்த காவல்துறையினர், நேரில் விசாரணை செய்து வருகின்றார்கள்.

மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளார். நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததா அல்லது வேறு ஏதாவது கலந்துள்ளதா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Views: - 291

0

0