மனைவி மீது கோபம்.. லாட்ஜ் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற கேரள வாலிபர்.. குமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் நடந்த விபரீதம்!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 3:52 pm
Quick Share

மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து லாட்ஜில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கேரள வாலிபரால் கன்னியாகுமரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நூறநாடு பகுதியை சார்ந்தவர் ரதீஷ். (32) இவர் இவரது மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 52 பேர்களுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்தில் சுற்றுலா புறப்பட்டனர். பழனி, ராமேஸ்வரம், திருச்செந்தூர் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று இரவு கன்னியாகுமரி வந்தனர்.

கன்னியாகுமரி பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று இரவு பேருந்தில் வந்த அனைவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது, பிரதீஷ் சுற்றுலா வந்த இடத்தில் மது குடித்ததாகவும், இதனால் கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை பிரதிஷுக்கும், அவரது மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபம் அடைந்த பிரதிஷ், தான் தங்கி இருந்த தங்கும் விடுதியில் மேல் தளத்திற்கு சென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

அவரது மனைவியின் அலறல் சத்தம் கேட்டு உடன் சுற்றுலா வந்தவர்கள் திரண்டனர். தகவல் இருந்து அங்கு வந்த கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் பிரதிஷுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், அவர் இருக்கும் இடத்தை தீயணைப்பு வீரர்கள் நெருங்கினர். தீயணைப்பு வீரர்கள் தன் அருகே வந்தால் கீழே குதித்து விடுவேன் என அவர் மிரட்டல் விடுத்தார்.

அவரது மனைவி மற்றும் குழந்தைகளும், உடன் சுற்றுலா வந்தவர்களும் கெஞ்சி கேட்டும் அந்த வாலிபர் கீழே இறங்க மறுத்துவிட்டார். இதனால், சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாகவும் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் போக்குகாட்டிய கேரளா வாலிபர் பிரதீஷ் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் காயமடைந்த அவரை தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரளா வாலிபரின் இந்த தற்கொலை முயற்சியால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 301

0

0