படுத்த படுக்கையாக கிடந்த மனைவி… பங்காளியுடன் சேர்ந்து கணவன் செய்த காரியம் ; பதறியடித்து காவல்நிலையம் சென்ற மகன்..!!

Author: Babu Lakshmanan
4 July 2023, 5:03 pm
Quick Share

தருமபுரி ; பாலக்கோடு அருகே கிட்னி பாதிக்கப்பட்ட மனைவியை பங்காளி உதவியுடன் கழுத்து அறுத்து கொல்ல முயன்ற கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அல்ராஜ் கவுண்டர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன். இவரது மனைவி ஈஸ்வரி (45). இவர்களது 2 மகன்களும், பாலக்கோடு பேருந்து நிலையம் எதிரே செல்போன் கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஈஸ்வரிக்கு கிட்னி பழுதடைந்து நோய் வாய்ப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

திடீரென கடையில் இருந்து வீட்டிற்கு வந்த அவரது மகன் நவீன்குமார் தாய் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவீர சிகிச்சையில் இருந்து வருகிறார். இதுகுறித்து அவரது மகன் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், நோய் வாய்ப்பட்ட மனைவியை தொல்லையாக நினைத்த ஈஸ்வரியின் கணவர் சரவணன் (51), மனைவியை கொல்ல அதே பகுதியை சேர்ந்த தனது பங்காளி பச்சியப்பனுடன் (50) கூட்டு சேர்ந்து ஈஸ்வரியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.

உடனடியாக இருவரையும் கைது செய்த பாலக்கோடு காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவனே மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 1153

0

0