அடுத்தது உதயா தான்… இன்னும் 50 வருடம் ஆனாலும் திமுகவை அசைக்க முடியாது ; அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் பேச்சு

Author: Babu Lakshmanan
19 January 2024, 10:23 am
Quick Share

50 வருடம் ஆனாலும் திமுகவை அசைக்க முடியாது என்று தமிழக வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் கொடியேற்றி, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் தி.மு.கவின் 100வது கொடியேற்றும் நிகழ்ச்சி திருச்சி கிழக்கு மாநகர திமுகவின் சார்பாக தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து 80 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மண்டல தலைவர்கள் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர் லீலாவேலு, மாமன்ற உறுப்பினர்கள் கழகத்தினர் நிகழ்வில் திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியதாவது :- அன்பில் மகேஷ் பொய்யாமொழி இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். சிலர்கள் செயல்படுவார்கள், ஆனால் பேசத் தெரியாது. எல்லாம் ஒரு சேர அமைந்திருப்பவர் மகேஷ் பொய்யாமொழி.

தலைவர் எல்லா மாவட்டங்களிலும் 100 கொடிகள் ஏற்ற வேண்டும் அறிவித்தார். ஆனால் நாங்கள் பின்தங்கி தான் உள்ளோம். ஆனால் திருச்சியில் மகேஷ் பொய்யாமொழியோ அதை எட்டி விட்டார்.

நம் கட்சியை நினைக்கும் போது ஒரு பெருமை. உன் தலைவர் யார்? கலைஞர், கலைஞருக்கு பிறகு‌ யார் தலைவர் தளபதி நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம். பிறகு உதயா. இந்த கட்சியை 50 வருடத்திற்கு யாராலும் அசைக்க முடியாது. இந்த இயக்கம் மக்களுக்கான இயக்கம், தமிழ் சமுதாயம் உணர்வோடு வாழ வேண்டும் என்றால் இந்த இயக்கம் இருந்தாக வேண்டும், என பேசினார்.

Views: - 257

0

0