காணாமல் போன நபர்…. 23 வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி தருணம் : நேரில் பார்த்தும் இவர்தான் என் தந்தையா என கேட்டு கதறிய மகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 June 2022, 2:42 pm
Villupuram Missing - Updatenews360
Quick Share

விழுப்புரம் : 23 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபரை விழுப்புரத்தில் மீட்ட குடும்பத்தினரின் நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கனியம் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). இவர் அப்பகுதியில் கிணறு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் தாமஸ் என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததோடு வீட்டை விட்டு வெளியேறி நடந்தே ஊர், ஊராக சென்று வந்துள்ளார். அவ்வாறு சென்ற அவர், சாலையில் கிடக்கும் உணவுப்பொருட்களை எடுத்தும், பலரிடம் யாசகம் பெற்றும் சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த 1999-ம் ஆண்டில் வீட்டை விட்டு வெளியே சென்ற வேல்முருகன், அதன் பிறகு வீடு திரும்பவே இல்லை. அவரை பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடிப்பார்த்தும் வேல்முருகன் எங்கு சென்றார், என்ன ஆனார் என்ற விவரம் தெரியவில்லை.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், பசியில்லா தமிழகம் என்ற அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக அங்கு சென்ற அந்த அமைப்பின் நிறுவனர் முகமதுஅலி ஜின்னா தலைமையிலான ஊழியர்கள், அந்த நபரை மீட்டனர்.

அப்போது அந்த நபர் முடி திருத்தம், முக சவரம் செய்யாமல் பறட்டை தலையுடனும், தாடியுடனும் இருந்தார். அவர் மீது கடுமையான துர்நாற்றம் வீசியது. பல ஆண்டுகளாக அந்த நபர் குளிக்காமல் இருந்ததை அறிந்த அந்த அமைப்பினர், விழுப்புரம் அழைத்து வந்து அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்த்தனர். பின்னர் அவருக்கு முடிதிருத்தம், முக சவரம் செய்து குளிக்க வைத்து உரிய சிகிச்சை அளித்துள்ளனர்.

அவரிடம் பேச்சு கொடுத்தபோது அவர், தன்னுடைய பெயர் வேல்முருகன், தன்னுடைய ஊர் ஆறுமுகநேரி என்றும் தனது பெற்றோர் செல்லத்துரை, குருவம்மாள் என்று மட்டும் மாறி, மாறி கூறி வந்துள்ளார், மற்ற எந்தவொரு விவரமும் அவருக்கு தெரியவில்லை.

இதையடுத்து வேல்முருகனை புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தையும், அவரது பெயர், ஊர் விவரத்தையும், சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதனிடையே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், அந்த ஆசிரமத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் நலம் விசாரித்து அவர்களுக்கு பழங்களை வாங்கி கொடுத்துள்ளார்.

இதில் வேல்முருகனிடம் நலம்விசாரித்து அவருக்கு பழம் வழங்கினார். இந்த வீடியோக்களும் அதிகளவில் வைரலாகியது. இதை பார்த்த வேல்முருகனின் உறவினர்கள், அவரது மகன் தாமசுக்கு அந்த வீடியோக்களை அனுப்பி உங்கள் தந்தை பற்றி அடையாளம் தெரிகிறதா என கேட்டுள்ளனர்.

ஆனால் தாமசுக்கு, அந்த நபர் தனது தந்தை தானா என்பதை உறுதி செய்ய முடியாமல் தவித்தார். ஏனெனில் தாமஸ் சிறுவயதில் இருக்கும்போதே அவரது தந்தை வேல்முருகன் காணாமல் போய்விட்டார்.

வேல்முருகனை அவரது உறவினர்கள் மற்றும் அக்கிராம மக்கள் அடையாளம் கண்டு உறுதி செய்ததை தொடர்ந்து 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது தந்தை கிடைத்து விட்டதால் தாமஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

இதையடுத்து தந்தையை பார்க்க தாமஸ், தனது சித்தப்பா செல்வராஜிடன் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு நேற்று காலை விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் அங்குள்ள ஆசிரமம் சென்று தந்தை வேல்முருகனை பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீர் மல்க அவரை கட்டியணைத்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோரின் முன்னிலையில் வேல்முருகனை அவரது குடும்பத்தினரிடம் ஆசிரம ஊழியர்கள் ஒப்படைத்தனர்.

Views: - 464

0

0