‘நானும் ரவுடிதான்… சட்டையை கழற்றினால்..’ பேருந்தை வழிமறித்த பயணியை எச்சரித்த அரசுப் பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 6:15 pm
Quick Share

நெல்லை ; நான்குநேரியில் அரசு விரைவு பேருந்து ஓட்டுநர், பேருந்தை வழிமறித்த பயணியை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சிற்கு அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல ஆணை உத்தரவு இருந்தும் திசையன்விளையில் இருந்து நெல்லைக்கு எந்த நிறுத்தத்திலும் நிற்காமல் சென்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து காலையில் முன்னாள் இராணுவ வீரரான தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த கணேஷ் ராஜா (65) என்பவர் பரப்பாடியில் பஸ் நிலையத்தில் நெல்லைக்கு செல்வதற்காக நின்றபோது இந்த பஸ் வந்தது. உடனே அவர் பஸ்சை நிறுத்த கைகாட்டி உள்ளார். அதை பார்த்தும் டிரைவர் பஸ்சை நிற்காமல் நெல்லையை நோக்கி வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது பைக்கில் பின் தொடர்ந்து நான்குநேரி அருகே உள்ள ரயில்வே கேட் அருகே பஸ்சை மறித்து டிரைவரிடம் பரப்பாடியில் ஏன் நிறுத்தத்தில் நிறுத்தவில்லை என கேட்டு உள்ளார்.

இதனைத் தொடர்ந்து இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் உள்ளே இருந்த பயணிகள் டிரைவருக்கு சாதகமாக களம் இறங்கி கணேச ராஜாவை தாக்க முற்பட்டனர். அப்பொழுது அங்கு இருந்த பொதுமக்கள் துணையுடன் அந்த பஸ்சை வழிமறித்து நிறுத்தியதால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து நான்குநேரி டிஎஸ்பி ராஜுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பியிடம் பயணி கணேசராஜா நான் ஒரு முன்னாள் ராணுவத்தில் பணியாற்றினேன். தற்போது ஓய்வு பெற்ற நிலையில் எனக்கே இந்த நிலையா என கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் டிரைவரிடம் பஸ்சை எடுத்து செல் என்று கூறியதை தொடர்ந்து பஸ் டிரைவர் சரவணன் பயணியிடம் நானும் ரவுடிதான். சட்டையை கழற்றினால் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, போலீசார் சமரசம் முயற்சில் ஈடுபட்டதை அடுத்து கணேசராஜா பஸ்சில் எறினார். பஸ்ஸும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. சில நாட்களுக்கு முன்பு நாங்குநேரி ஊருக்குள் வர மறுத்த அரசு பஸ்சில் பயணிகளுக்குள் ஏற்பட்ட மோதலை சமாளிக்க முடியாத கண்டக்டர் தரையில் விழுந்து உருண்ட நிகழ்ச்சியை தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நான்குநேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பஸ் பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பதாகவும், ஆனால் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மேலும் நெல்லை மாவட்ட கலெக்டர் அனைத்து பேருந்துகளும் உரிய நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் மீறினால் பஸ்சின் உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரவு இருந்தும், இதுவரை யாரும் மதிப்பதில்லை என்னும் கலெக்டர் உத்தரவிற்கு மரியாதை இல்லாத நிலையில் சாதாரண பயணிகளின் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நிர்வாக சீர்கேட்டால் இப்படி பயணிகள் அவதி படுகிறார்கள் என்றும் இதற்கு பின்னர் கலெக்டர் விதிகளை மீறி இயக்கப்பட்டு வரும் அனைத்து அரசு பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான்குநேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 252

0

0