காவல்துறை மட்டுமல்ல எந்த அமைச்சரும் முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இல்லை : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2022, 4:15 pm
Vanathi Seenivasan -0 Updatenews360
Quick Share

சமுதாயத்தில் அனைவரையும் பாதிக்ககூடிய அளவில் மின்கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகவும், மத்திய அரசு கூறியதால் கட்டணத்தை உயர்த்தி உள்ளோம் என உண்மைக்கு புறம்பாக திமுக பதிலளிப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் உயர்த்தப்படுள்ளது. இதனை கண்டித்து கோவை மாவட்ட பாஜக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், சமுதாயத்தில் அனைவரையும் பாதிக்ககூடிய அளவில் மின்கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகவும், மத்திய அரசு கூறியதால் கட்டணத்தை உயர்த்தி உள்ளோம் என உண்மைக்கு புறம்பாக அவர்கள்(திமுக) பதிலளிப்பதாக கூறினார்.

தமிழகத்தில் அனைத்தையும் நாங்களாகவே பார்த்துகொள்ள முடியும் அனைத்தையும் நாங்களாகவே நிர்வகித்து கொள்ள முடியும் என ஒரு புரம் கூறி விட்டு மறுபுறம் மின்சாரம் மாதிரியான தேவையானவற்றை கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் திமுக அரசு நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாக தெரிவித்தார்.


அமைச்சரின் பெயரில் குடும்பத்தினர் ஒவ்வொரு ஹோட்டலிலும் தங்கி கமிஷன் வாங்கி கொண்டு அவார்டு தருவதாக கூறிய அவர், முதலல்வருக்கு இதனை எல்லாம் கவனிக்க நேரம் உள்ளதா என தெரியவில்லை எனவும் இதனையெல்லாம் கவனித்திருந்தால் காவல்துறையை வைத்திருக்க கூடிய முதல்வர் கள்ளக்குறிச்சி சம்பவம் போன்றவற்றை தவிர்த்திருக்க முடியும் என கூறினார்.

மேலும் முதல்வரின் கட்டுபாட்டில் காவல்துறை மட்டுமல்லாமல் எந்த அமைச்சர்களும் இல்லை என்பது சிறிது சிறிதாக நிரூபணமாகிறது எனவும் தெரிவித்தார். சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலைக்கு பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை என்று சிலர் கூறி வருவதற்கு கருத்து கேட்டதற்கு பதிலளித்த அவர், சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் நமது நாட்டில் உற்பத்தியாகவில்லை எனவும் அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருள் என்பதால் ஒவ்வொரு நாளும் விலைவாசி மாறிக்கொண்டிருக்கும் எனவும் நமது கட்டுப்பாட்டில் உள்ளவற்றை நாம் சரியாக செய்கிறோமா என்பது தான் விஷயம் எனவும் பதில் அளித்தார்.

மேலும் தேர்தல் வாக்குறுதிகள் பெட்ரோல் டீசல் குறைப்போம் என்று வாக்குறுதி அளித்தும் ஏன் குறைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். உதய் மின் திட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இங்கு மின்சார உற்பத்தி என்பது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது எனவும், தமிழகத்தை பொறுத்தவரை அதிகமாக தொழிற்சாலை இருக்கின்ற மாநிலம் எனவும் அவ்வாறு இருக்கும் பொழுது அடுத்த பத்து வருடத்திற்கு தேவையான மூலதனத்தை ஏன் உருவாக்கவில்லை என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் சோலார் குறித்து கருத்து என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.


மேலும் திமுக விடம் ஐடியா இல்லை எனவும் நிர்வாகத் திறமை இல்லை எனவும் எனவே பழி போடுவதற்காக பிரதமர் மோடி உங்களுக்கு வேண்டும் என பதிலளித்தார். மேலும் உதய் மின் திட்டத்தில் இன்னும் சேர்த்திருத்தங்கள் உள்ளதாகவும் அதைப் பற்றி பேசுவதில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்ப்போம் என மாநில அரசு கூறி வந்தால் மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்த அவர் அதற்கு சிறந்த உதாரணம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என தெரிவித்தார். தமிழகத்தை விட கர்நாடகா குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் மின் கட்டணம் உயர்வாக உள்ளதற்கு பாஜக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பியதற்கு, அந்தந்த மாநிலங்களில் இருக்கக்கூடிய பாஜகவினர் அதன் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள் எனவும் தமிழகத்தில் உள்ள பாஜகவினருக்கு தமிழக மக்களின் நலன் முக்கியம் எனவும் பதில் அளித்தார்.

இதில் பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமன் பாஜக இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி உட்பட கோவை மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பாஜக வினர் கலந்து கொண்டனர்.

Views: - 465

0

0